கும்பகோணம் மகாமகம்... தொடங்கியது தீர்த்தவாரி... லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி பரவசம்
கும்பகோணம்: கும்பகோணம் மகாமக விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரி தொடங்கியுள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் மகாமகம் குளத்தில் புனித நீராடி வருகின்றனர்.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது கும்பகோணம் மகாமக திருவிழா. குரு சிம்மராசியில் இருக்கும்போது மகம் நட்சத்திரத்துடன் கூடிய பவுர்ணமி வரும் நாள் மகாமகம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் மக்கள் மகாமக குளத்தில் புனித நீராடுவதை பெரும் பாக்கியமாக கருதுகின்றனர்.
கும்பகோணத்தில் கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் இந்த விழா தொடங்கியது. உலகின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் மகாமகக் குளத்தில் நீராட வந்து செல்கின்றனர். இதுவரை சுமார் 20 லட்சம் பேர் மகாமகக் குளத்தில் புனித நீராடியதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தீர்த்தவாரி:
இந்நிலையில், இந்த விழாவின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி நடந்து வருகிறது. இந்த நாளில் மகாமக குளத்தில் புனித நீராடுவது, 12 கும்பமேளாவில் புனித நீராடியதற்கும், 108 ஆண்டுகள் காசியில் வாழ்ந்து கங்கையில் தினமும் நீராடியதற்கும் சமம் என்று கருதப்படுகிறது.
10 லட்சம் பக்தர்கள்:
எனவே மகாமக தீர்த்தவாரியில் பங்கேற்று புனித நீராடுவதற்காக நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கும்பகோணத்தில் குவிந்துள்ளனர். இன்று மட்டும் 10 லட்சம் பக்தர்கள் புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதி கும்பேஸ்வரர் தீர்த்தவாரி:
வடமேற்கு கரையில் ஆதி கும்பேஸ்வரருக்கும், அதே பகுதியில் காசி விஸ்வநாதர், நாகேஸ்வரர், சோமேஸ்வரர், ஆதிகம்பட்ட விஸ்வநாதர், ஏகாம்பரேஸ்வரர் ஆகியோருக்கும் தீர்த்தவாரி நடக்கிறது. கிழக்கு கரையில் பாணபுரீஸ்வரர் மற்றும் அபிமுகேஸ்வரருக்கும், மேற்கு கரையில் காளஹஸ்தீஸ்வரர், கோடீஸ்வரருக்கும், தெற்கு கரையில் அமிர்தகலசநாதர், கவுதமேஸ்வரருக்கும் தீர்த்தவாரி நடக்கிறது.
பச்சைக்கொடி:
ஆதிகும்பேஸ்வரர் மகாமக குளத்தில் இறங்கியதும் அவரது தீர்த்தவாரி நிகழ்ச்சி பச்சைக்கொடி அசைத்து பக்தர்களுக்கு தெரிவிக்கப்படும். இதைத்தொடர்ந்து மற்ற சுவாமிகளுக்கு தீர்த்தவாரி நடைபெறும். சுவாமிகள் தீர்த்தமாடி முடிந்ததும் பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்படுவார்கள்.
மகாமக குளத்தில் ஆதி கும்பேஸ்வரருக்கு தீர்த்தவாரி முடிந்தவுடன் வடக்கு கரையில் உள்ள தீர்த்தவாரி மண்டபத்தில் எழுந்தருளுகிறார்.
தீர்த்தவாரி நேரத்தில் மகாமக குளத்தில் பக்தர்களுடன் தருமபுரம் ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம், மதுரை ஆதீனம், திருப்பனந்தாள் ஆதீனம் ஆகியோர் புனித நீராடுகிறார்கள். மேலும் முக்கிய பிரமுகர்களும் இன்றைய தீர்த்தவாரி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள்.
பாதுகாப்பு:
இதனால் அங்கு ஏற்கனவே 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், மேலும் 10 ஆயிரம் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
சிறப்பு பேருந்துகள்:
மகாமகத் திருவிழா காரணமாக கும்பகோணத்துக்கு வரும் பேருந்துகள், ரயில்களில் கூட்டம் அதிகரித்துள்ளது. கும்பகோணம் நகரை சுற்றி 7 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2,800 சிறப்பு பேருந்துகளும், 68 சிறப்பு ரயில்களும் பல்வேறு ஊர்களில் இருந்து கும்பகோணத்திற்கு இயக்கப்படுகின்றன.
கும்பகோணம் மகாமகம் விழாவுக்கு செல்வோர் வசதிக்காக கருதி, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து, கடந்த வெள்ளிக்கிழமை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் 150 பேருந்துகளும், பிற கழகங்களில் இருந்து 50 பேருந்துகளும் என கடந்த மூன்று தினங்களில் தினமும் சுமார் 200 பேருந்துகள் இயக்கப்பட்டன.
பொது விடுமுறை:
மகாமக தீர்த்தவாரியை முன்னிட்டு இன்று தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.