14 பெண்களுடன் திருமணம்.. 10 லட்சம் கொள்ளை.. கொலை… சிக்கிய ஆடு அந்தோணியிடம் கிடுக்குப்பிடி விசாரணை
கல்லூரி லாக்கரை உடைத்து 10 லட்சம் கொள்ளையடித்த ஆடு அந்தோணியிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமாரபாளையம்: 14 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதோடு, கொலை, கொள்ளை என தொடர்ந்து ராவடியில் ஈடுபட்டுவந்த ஆடு அந்தோணியிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் பிரபல தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் நள்ளிரவில் புகுந்த மர்ம ஆசாமி, கல்லூரி லாக்கரில் இருந்த 10 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றுவிட்டார். மேலும், அங்கிருந்த சிசிடிவியின் மூலம் பதிவாகும் ஸ்டோரேஜ் யூனிட்டையும் கழற்றி எடுத்துச் சென்றுவிட்டதால் போலீசாரால் இவரை பிடிக்க முடியவில்லை. தொடர்ந்து தேடுதல் வேட்டையை போலீசார் நடத்தி வந்தனர். 8 மாதங்கள் ஆகியும் மர்ம நபர் குறித்த விவரங்கள் எதுவும் தெரியவில்லை.
இந்நிலையில், கேரள மாநிலம் திருவனந்தபுரம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் தொடர்புடையதாகக் கூறி ஆடு அந்தோணி என்பவரை கேரள போலீசார் கைது விசாரித்து வருவது தமிழக போலீசாருக்கு தெரிய வந்தது. கேரள போலீசார் விசாரணையின் போது, குமாரபாளையம் கல்லூரியில் ஆடு அந்தோணி 10 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்ததும் தெரிய வந்தது.
இதனையடுத்து, தமிழக போலீசாரின் தொடர் முயற்சியால் ஆடு அந்தோணியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கிடைத்தது. கேரளா சென்ற தமிழக போலீசார் ஆடு அந்தோணியை அழைத்து வந்து திருச்செங்கோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு கோர்ட் அனுமதி அளித்தது.
இந்த இரண்டு நாள் விசாரணையின் போது, ஆடு அந்தோணியின் பல ரகசியங்களும் திடுக்கிடும் தகவல்களும் வெளியே வந்தன. தொடக்கத்தில் ஆடுகளை திருடி விற்றதால் அந்தோணிக்கு ஆடு அந்தோணி என்ற பெயர் வந்ததாகவும், பின்னர், கம்யூட்டர் உதிரி பாகங்களை திருட்டி விற்று வந்ததாகவும் ஆடு அந்தோணி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2012ம் ஆண்டு கேரளாவில் கொல்லம் பாரிபள்ளி என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்ஐ ஆகிய இருவரையும் கத்தியால் குத்தியதில், இன்ஸ்பெக்டர் மரணம் அடைந்தார். இதனால் அந்தோணி தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அவர் தலைக்கு 1 லட்சம் ரூபாயும் அறிவிக்கப்பட்டது. இதனால் தமிழகத்திற்கு வந்து தலைமறைவாக இருந்ததையும் அந்தோணி ஒத்துக் கொண்டார்.
மேலும், தமிழகத்திற்கு வந்த பின்னர், கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய இடங்களில் பதுங்கி இருந்த அந்தோணி திருமணத்திற்கு மாப்பிள்ளை வேண்டும் என்ற விளம்பரங்களை பார்த்து அந்த பெண்களை ஏமாற்று வேலையையும் கச்சிதமாக செய்துள்ளார். அப்படி இதுவரை 14 பெண்களை ஏமாற்றியதையும் அந்தோணி ஒப்புக் கொண்டார்.
இதனிடையே கல்லூரி மாணவிகளுக்கு சீட் வாங்கித் தரும் புரோக்கர் வேலையையும் ஆடு அந்தோணி செய்துள்ளார். அப்போதுதான் குமாரபாளையத்தில் உள்ள கல்லூரியில் 10 லட்சம் ரூபாயை கொள்ளையடிக்க திட்டம் தீட்டி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணையில் இதுபோன்ற பல குற்றங்களையும் பல திடுக்கிடும் சம்பவங்களையும் போலீசாரிடம் ஆடு அந்தோணி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, கேரளாவில் பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் மணியம்பிள்ளையை கத்தியால் குத்தி கொன்றதற்கு கேரள கோர்ட் 4.45 லட்சம் ரூபாய் அபராதம் மற்றும் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது குறிப்பிடத் தக்கது.