மணப்பாடில் மேலும் 10 திமிங்கிலங்கள் உயிரிழப்பு - காரணம் தெரியாமல் தடுமாறும் மீன்வளத்துறை
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே மணப்பாடில் கரை ஒதுங்கிய திமிங்கிலங்களில் 36 நேற்று மீண்டும் கடலில் விடப்பட்ட நிலையில், இன்று மேலும் 10 சிறிய வகை திமிங்கிலங்கள் உயிரிழந்து கரை ஒதுங்கின. நேற்று உயிரிழந்த 45 திமிங்கிலங்கள் கடற்கரையிலேயே புதைக்கப்பட்டன.
தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு அருகே 81 திமிங்கிலங்கள் கரை ஒதுங்கிய நிலையில் அவற்றில் 45 திமிங்கிலங்கள் உயிரிழந்துள்ளன. பொதுவாக ஆழ்கடலில் தெளிவான தண்ணீர் உள்ள பகுதியில் மட்டுமே காணப்படும் திமிங்கிலங்கள் நேற்றிரவு மணப்பாடு கடற்கரையோரம் ஒதுங்கின.
இதனிடையே, கரை ஒதுங்கிய திமிங்கிலங்களை மீட்டு மீண்டும் கடலில் விடும் முயற்சி தீவிரப்படுத்தப்பட்டது. வனத்துறையினர், காவல்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் பெருமளவிலான மீனவர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர். இதில் பல மணிநேர முயற்சிகளுக்குப் பிறகு 36 திமிங்கிலங்கள் மீண்டும் கடலில் விடப்பட்டன. 45 திமிங்கிலங்கள் பரிதாபமாக உயிரிழந்தன.
இறந்த திமிங்கலங்கள் கடற்பரப்பில் மணலைத் தோண்டி புதைக்கப்பட்டுள்ளது. திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியதற்கான காரணங்கள் குறித்து அறிய உடற்கூறு பரிசோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் பெரும்பாலானவை கடலில் விடப்பட்ட நிலையில் மீண்டும் 10 திமிங்கிலங்கள் இன்று கரை ஒதுங்கியுள்ளன. கழிவுகளால் கடல் மாசுபடுவதும் திமிங்கலங்களின் உயிரிழப்புக்கு முக்கிய காரணம் என அப்பகுதி மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.