கோவாலு, டே கோவாலு... 41வது வாட்டியா விழுந்திருச்சாமேடா கோவாலு!
சென்னை: சென்னை விமான நிலையக் கண்ணாடி மேற்கூரை 41 ஆவது முறையாக உடைந்து விழுந்துள்ளது.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்து விழும் சம்பவம் வாடிக்கையாகி விட்டது. தரமற்ற பணிகளால் கண்ணாடி, பால்ஸ் சீலிங், டைல்ஸ் கற்கள் போன்றவை அடிக்கடி உடைந்து விழுகின்றன.
கடந்த வாரத்தில் கண்ணாடி உடைந்து ஊழியர் ஒருவர் மீது விழுந்ததில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. நேற்றிரவு 9 மணியளவில் மீண்டும் ஒரு சம்பவம் நடந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பன்னாட்டு விமான நிலையத்தில் முதல் தளத்தில் விமானங்கள் நிறுத்தப்பட்டு இருக்கும் பகுதியில் கண்ணாடி திடீரென உடைந்து விழுந்தது.
அந்த பகுதியில் பயணிகளோ, ஊழியர்களோ அப்போது இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஆனாலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து உடைந்து நொறுங்கி கிடந்த கண்ணாடி சிதறல்களை ஊழியர்கள் சுத்தம் செய்தனர்.
இந்த சம்பவம் 41வது முறையாக நடந்துள்ளது. சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைமையை இது உணர்த்துவதாக அமைந்துள்ளது.