மழைக் காளான்களால் வந்த வினை - சமைத்து சாப்பிட்ட 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி
நல்லம்பள்ளி: தர்மபுரியில் காளான் சமைத்து சாப்பிட்ட 10க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள தொக்கூர் போதன அள்ளி கிராமத்தில் 10 பேர் நேற்று இரவு ஒரு வீட்டில் வைத்து காளான் சமைத்து சாப்பிட்டுள்ளனர். அதனை சாப்பிட்ட பின் அனைவரும் தூங்குவதற்காக அவரவர் வீடுகளுக்கு சென்று விட்டனர். பின்னர் இரவு 11 மணியளவில் காளான் சாப்பிட்ட 10 பேருக்கும் திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இது பற்றி உடனே ஊர் மக்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். மேலும் தொப்பூர் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு 108 ஆம்புலன்ஸ் வாகனம் விரைந்து வந்தது. வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மழையின் காரணமாக அந்த பகுதியில் ஆங்காங்கே பெரிய அளவில் காளான்கள் முளைத்துள்ளன. இவ்வாறு திடீர், திடீர் என ஆங்காங்கே முளைத்துள்ள இந்த காளான்களை அறுவடை செய்து 10 பேரும் அதனை சமைத்து சாப்பிட்டுள்ளனர். அந்த காளான்களை சரியான முறையில் சமைக்காமல் அதனை சாப்பிட்டதால் தான் அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளதாக பணியில் இருந்த டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.