கோயம்பேட்டு மார்க்கெட்டில்.. கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைத்த 1 டன் மாம்பழங்கள் பறிமுதல்
சென்னை கோயம்பேட்டில் கால்ஷியம் கார்பைடு கற்கள் மூலம் செயற்கையாக பழுக்க வைத்த 1 டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை : சென்னை கோயம்பேட்டில் கால்ஷியம் கார்பைடு கற்கள் மூலம் செயற்கையாக பழுக்க வைத்த 1 டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
மாம்பழ சீசன் தொடங்கியுள்ளதால் , சேலம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பல்வேறு வகையான மாம்பழங்கள் பழுக்காத நிலையில் லாரிகளில் வருகின்றன.
இவற்றை கால்ஷியம் கார்பைடு கற்கள் மூலம் செயற்கையாக பழுக்க வைத்து வியாபாரிகள் விற்பதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று கோயம்பேட்டில் உள்ள 50க்கும் மேற்பட்ட கடைகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெரும்பாலான கடைகளில் கால்ஷியம் கார்பைடு கற்கள் மூலம் மாம்பழங்களை பழுக்க வைத்திருந்தது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து 200 கிலோ கார்பைடு கற்களும் அதன் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 1 டன் மாம்பழங்களும் பறிமுதல் செய்யப்பட்டு, கொடுங்கையூரில் உள்ள குப்பை கொட்டும் பகுதியில் கொட்டி அழிக்கப்பட்டன. இது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் வியாபாரிகளை எச்சரித்து, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
இதுபோன்ற கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைக்கப்படும் பழங்களை நாம் உட்கொண்டால் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு நாம் ஆளாக நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.