கடந்த 2 ஆண்டுகளில் கட்டிட விபத்துக்களில் சிக்கி 100 தொழிலாளர்கள் பலி: அதிர்ச்சித் தகவல்
சென்னை: சென்னையில் மட்டும் கடந்த இரண்டு ஆண்டுகளில் கட்டுமான இடங்களில் நடந்த விபத்துக்களில் சிக்கி சுமார் 100 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலும் விபத்தில் சிக்கி பலியானவர்கள் வேற்று மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக தொழிலாளார்களுக்கு வேலைவாய்ப்பு தரும் தொழிலாக விளாங்குவது கட்டுமானப் பணிகள் தான். அதிலும், சென்னை போன்ற பெருநகரங்களில் அதிகரித்து வரும் அடுக்ககங்களால் கட்டுமானத் தொழில் மென்மேலும் வளர்ந்து வருகிறது.
ஆனால், நிறுவனங்களில் மேற்கொள்ளப் படும் தொழிலாளர் பாதுகாப்பு நெறிமுறைகள் இது போன்ற கட்டுமானத் தொழிலில் பின்பற்றப் படுகிறதா என்றால் அது கேள்விக்குறிதான்.
சமீபத்திய விபத்துக்கள்....
கட்டுமானத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளார்களுக்கு ஏற்படும் பாதுகாப்பு குறைபாடுகளினால் அவர்களது உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையே காணப்படுகிறது. இதற்குச் சான்றாக சமீபத்திய விபத்துக்கள் உள்ளன.
ராயப்பேட்டை விபத்து....
கடந்த வாரத்தில் கூட ராயப்பேட்டை அடுக்கக கட்டுமானத் தளாத்தில் ஏற்பட்ட விபத்தில் இரண்டு தொழிலாளர்கள் பரிதாபமாகப் பலியானார்கள்.
அதிகரிக்கும் விபத்துக்கள்...
சென்னையை போலவே மதுரை மற்றும் கோவை நகரங்களிலும் இது போன்ற விபத்துக்கள் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளார் ஒருங்கிணைக்கப்படாத பணி ஊழியர்கள் சம்மேளனத்தைச் சேர்ந்த கீதா ராமகிருஷ்ணன்.
30 பணியாளர்கள் பலி...
மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கூட பழைய மகாபலிபுரம் சாலையில் ஏற்பட்ட கட்டுமான விபத்துக்களில் சிக்கி 30 கட்டிடப் பணியாளர்கள் பரிதாபமாக பலியானதாக கூறுகிறார்.
உரிய நடைமுறைகள்...
இது குறித்து ராமகிருஷ்ணன் கூறுகையில், ‘ கட்டுமானம் சிறிய அளவோ அல்லது பெரிய அளவிலோ நடைபெற்றாலும் உரிய நடைமுறைகளைப் பின்பற்றுவது அவசியம்.
கல்வியறிவு அவசியம்...
கட்டுமானத் தொழிலாளார்களுக்கு தகுந்த கல்வியறிவை போதிப்பதன் முலம், அவர்களால் நிர்வாகத்தை எதிர்த்து கேள்வி கேட்க முடியும். மேலும் தங்களுக்கான உரிமைகளை கேட்டுப் பெற அவர்களால் இயலும்' எனத் தெரிவித்துள்ளார்.
வெளிமாநில தொழிலாளர்கள்....
மேலும், உள்ளூர் தொழிலாளர்களைக் காட்டிலும் வெளி மாநிலங்களில் இருந்து பணிக்கு வரும் தொழிலாளர்களே விபத்தில் அதிகம் சிக்குகிறார்கள். மொழிப்பிரச்சினையும் இதற்கு முக்கியக் காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிவாரணத் தொகை...
தொழிலாளர் சட்டப்படி, பாதிக்கப்பட்ட தொழிலாளார்களின் குடும்பத்தாருக்கு நிர்வாகம் தகுந்த நிவாரணத் தொகை வழங்க வேண்டும். ஆனால், பெரும்பாலும் அவ்வாறு இங்கு நடை பெறுவது இல்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
செயலிலந்த தொழிலாளர் நலவாரியம்...
தமிழ்நாடு கட்டிடத் தொழிலாளர்கள் நலவாரியம் கடந்த இரண்டாண்டுகளாக புதுப்பிக்கப்பட வில்லை என அதன் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். சரியாக மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவது அவசியம் ஆனால், அந்த நெறிமுறை தற்போது பின்பற்றப் படுவது இல்லையாம்.
ரேஷன் கார்டு அவசியம்....
சுமார் 23 லட்சம் உறுப்பினர்கள் இந்த நல வாரியத்தில் உள்ளனர். இதில் உறுப்பினர்களானால் மட்டுமே சில சலுகைகள் மற்றும் உரிமைகளைப் பெற முடியும் என்ற சூழ்நிலையில் பல வெளிமாநில கட்டுமானத் தொழிலாளர்களால் இதில் உறுப்பினர்களாக முடிவதில்லை. காரணம், இதில் அங்கம் வகிக்க ரேஷன் கர்டு அவசியம் என்பதே ஆகும்.
10 லட்சம் தொழிலாளர்கள்....
கிட்டத்தட்ட தமிழகத்தில் மட்டும் சுமார் 10 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதில் பெரும்பாலானவர்கள் சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர்,ஓசூர், திருச்சி, திருநெல்வேலி போன்ற இடங்களில் பணிகளில் உள்ளனராம்.
வெளிமாநில தொழிலாளர்கள்....
அதிலும் குறிப்பாக பீகார், மேற்கு வங்காளம், ஜார்கண், ஒடிசா, உத்தரப்பிரதேசம் மற்ரும் அஸ்ஸாம் மாநிலங்களைச் சேர்ந்தவர்களே கட்டுமான பணிகளுக்காக தமிழகம் வருவதாக தெரிய வந்துள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கைகள்...
தொடரும் உயிர்ப்பலிகளைக் கருத்தில் கொண்டாவது பரிதாபத்திற்குரிய இந்தத் தொழிலாளர்களுக்கு தேவையான தகுந்த முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் தகுந்த இழப்பீடு வசதிகளைச் செய்து தரும் நெறிமுறைகள் வகுக்கப் பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.