சென்னை விமான நிலையத்தில் ரூ.100 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்
சென்னை: சென்னை விமான நிலையத்தில் நடப்பாண்டு மட்டும் ரூ.100 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக சென்னை சுங்க இலாகா முதன்மை ஆணையர் ரமேஷ் கூறினார்.
சர்வதேச சுங்க தின விழா நிகழ்ச்சி சென்னை விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவை தொடங்கி வைத்து பேசிய சென்னை சுங்க இலாகா முதன்மை ஆணையர் எஸ்.ரமேஷ், சுங்கத் துறை அதிகாரிகளின் முயற்சியால் கடந்த 2014-ஆம் ஆண்டு மட்டும் ரூ.100 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யபட்டுள்ளதாக கூறினார்.
தற்போதுள்ள சந்தை மதிப்பீட்டின்படி, இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட தங்க மதிப்பில் இதுவே அதிகபட்ச பறிமுதல் ஆகும்.
ஏற்றுமதி, இறுக்குமதியில் ஏற்படும் காலதாமதத்தை போக்கும் வகையிலும் விரைவாக சரக்குகளை அனுப்பிடவும் ஒருங்கிணைந்து செயல்படுத்த உள்ளோம். இதனால் இந்தியாவில் வர்த்தகம் அதிகரிக்கும். மேலும் சுங்க விதிகளை நன்றாக தெரிந்து கொண்டு ஏற்றுமதி, இறக்குமதி செய்பவர்கள் செயல்பட்டால் காலதாமதம் ஏற்படுவதை தடுக்க முடியும்.
கடத்தல் தங்கம்
இன்றைய காலகட்டத்தில் சுங்க இலாகா பணி மிகவும் சவாலானது. நவீன தொழில்நுட்பத்துடன் கடத்தல் நடக்காமல் கண்டுபிடிக்கப்படுகிறது. தங்கம் கடத்தல் செய்பவர்கள் சென்னையில் இருந்து அதிகமாக செய்து வருகின்றனர்.
கண்காணிப்பு கேமரா
கடந்த 2013-2014-ம் நிதி ஆண்டில் ரூ.35 கோடி கடத்தல் தங்கம் பிடிக்கப்பட்டது. ஆனால் 2014-2015-ம் நிதி ஆண்டில் இதுவரை ரூ.100 கோடி தங்கம் கடத்தலை பறிமுதல் செய்து உள்ளோம். தங்கம் கடத்தலை கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் கண்டுபிடித்து வருகிறோம்.
தீவிர சோதனை
மேலும், பயணிகளும் தீவிர சோதனை செய்யப்படுகின்றனர். விமானத்தில் ஏறிய பின்னரும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தங்கம் கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். சுங்க இலாகாவில் உள்ள அனைத்து தரப்பு அதிகாரிகள், ஊழியர்களும் கடத்தலை தடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுங்கத்துறை
மேலும், இதுபோன்ற கடத்தல் நடவடிக்கைகளை தடுக்க மத்திய தொழில் பாதுகாப்புப் படை, இந்திய விமான நிலையங்கள் ஆணையம், மத்திய சுங்கத் துறை ஆகியவற்றுக்கிடையே ஒத்துழைப்பை ஏற்படுத்துவது அவசியம் என்றும் முதன்மை ஆணையர் ரமேஷ் தெரிவித்தார்.