சென்னை ராஜாஜி சாலையில் 100 ஆண்டு பழமையான கட்டடம் இடிந்து விபத்து- உடனடியாக அகற்றம்
சென்னை ராஜாஜி சாலையில் உள்ள, 100 ஆண்டுகள் பழமையான கட்டடம், திடீரென இடிந்து விழுந்தது.
Recommended Video
சென்னை: ராஜாஜி சாலையில் உள்ள துறைமுககாவல் நிலையம் எதிரே, தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான, 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த கட்டடம் ஒன்று இந்த கட்டடம், நேற்று இரவு, 9.15க்கு திடீரென இடிந்து விழுந்தது.
அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், கட்டட இடிபாடுகளை அப்புறப்படுத்தினர்.
கடந்த சில தினங்களாக, சென்னையில் பெய்து வரும் கனமழையால் இந்த கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. இந்த பகுதியில் இதே போன்ற பழைய கட்டடங்கள் அதிகளவில் இருப்பதால், அவை எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது.
ராஜாஜி சாலையில கட்டடம்
சென்னையில் பாரிமுனை, கொண்டித்தோப்பு, மின்ட், மண்ணடி போன்ற இடங்களில், நூற்றாண்டைக் கடந்து வாழும் பல கட்டிடங்கள் இன்றும் உள்ளன. இத்தகைய கட்டிடங்கள் பல சிதிலமடைந்த நிலையில் உள்ளதால், அவற்றை இடித்துத் தள்ள வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் மெத்தனமாக உள்ளனர்.
பழமையான கட்டிடம்
இந்நிலையில் நேற்றிரவு சென்னை ராஜாஜி சாலையில், பெய்து வரும் கனமழையால் உறுதித்தன்மை இழந்த பழமையான கட்டிடம் இடிந்தது. நேற்றிரவு 10 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ள ராஜாஜி சாலையில் கிளைவ் பேட்டரி பகுதியில் உள்ள 3 அடுக்குகள் கொண்ட பழமையான கட்டிடத்தின் ஒருபகுதி தானாக இடிந்து விழுந்துள்ளது. திடீரென கட்டிடம் இடிந்து விழுந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
யாருக்கும் காயமில்லை
இரவு நேரம், மழைக்காலம் என்பதால் கட்டிடத்தின் அருகில் பொதுமக்கள் யாரும் இல்லை, சாலையிலும் போக்குவரத்து குறைவாகவே இருந்ததால் உயிரிழப்போ, பொதுமக்கள் காயமடைவதோ தவிர்க்கப்பட்டது.
போக்குவரத்து தடை
கட்டிடம் இடிந்த உடன் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராஜாஜி சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்ட துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் சேகர்பாபு , துறைமுகம் தொகுதியில் மட்டும் சுமார் 60க்கும் மேற்பட்ட பழமையான கட்டிடங்கள் இருப்பதாகவும் அவை இடிந்து விழுவதற்கு முன் அரசு போர்க்கால அடிப்படையில் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு
இடிந்து விழுந்த கட்டிடக் கழிவுகளை அகற்றும் பணியை ஆய்வு செய்த பின் பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில் இரவுக்குள் கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணி முடிவடையும் என்றும், அருகில் வசிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்த பின் கட்டிடத்தை முழுவதும் இடிக்கும் பணி நடைபெறும் என்று தெரிவித்தார்.