சென்ட்ரல் ரயில் நிலையத்தை சுத்தப்படுத்திய 1000 மாணவிகள்
சென்னை: எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக மாணவிகள் ஆயிரம் பேர், இன்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் முன்னிலையில், தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்து சென்ட்ரல் ரயில் நிலையத்தை சுத்தம் செய்தனர்.
மகாத்மா காந்தியின் கனவுத் திட்டங்களில் ஒன்றான தூய்மையான இந்தியாவை உருவாக்குவதை, ‘தூய்மை இந்தியா' என்ற பெயரில் திட்டமாகத் தொடங்கி உள்ளார் பிரதமர் மோடி. இதன்படி, கமல், சச்சின் உள்ளிட்ட பிரபலங்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
அதனைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தூய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது.
சமீபத்தில் நடிகர் கமல் தனது பிறந்தநாளின் போது கூட மாடம்பாக்கம் ஏரியை தனது ரசிகர்களோடு சேர்ந்து தூய்மை படுத்தினார். அந்த விழாவிலும் தமிழிசை உள்பட பாஜகவினர் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக மாணவிகள் 1000 பேர் இன்று பிரதமரின் சுத்தப்படுத்தும் திட்டத்தில் இணைந்தனர். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்ற இந்த விழாவிற்கு, பல்கலைக்கழக நிறுவனர் ஏ.சி.சண்முகம் தலைமை தாங்க, தலைவர் அருண்குமார் முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியில் புதிய நீதிக்கட்சி தலைமை நிலைய செயலாளர் ரவிக்குமார், பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் பழனிவேல், பா.ஜனதா அமைப்பு செயலாளர் மோகன்ராஜீலு, துணைத் தலைவர் சவேரா சக்கரவர்த்தி, மாவட்ட தலைவர்கள் காளிதாஸ், பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவைத் தொடங்கி வைத்து மாணவிகளிடம் உறுதிமொழி பெற்ற தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், அதனைத் தொடர்ந்து விழாவில் பேசியதாவது :-
பிரதமர் மோடி அறிவித்துள்ள தூய்மை இந்தியா திட்டத்தில் அரசு, தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் பங்கு எடுத்து வருகின்றன. இன்றைய தினம் மாணவர்கள் சுத்தப்படுத்துவதற்கான உறுதிமொழி அட்டவணையை தாங்கி இதை ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியாக மாற்றி உள்ளனர்.
சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகள் முடிந்த பிறகு இப்போது தான் நாட்டை சுத்தப்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு உருவாக்கப்பட்டு இருப்பது வருத்தமான விஷயம். இதை அரசியலாக்குவது அதை விட வருத்தம் அளிக்கிறது.
மக்கள் கையில் மோடி துடைப்பத்தை கொடுத்து விட்டதாக ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார். 67 ஆண்டுகளாக நாட்டை குப்பை மேடாக்கி இந்த சூழ்நிலை உருவாக காங்கிரஸ் தான் காரணம்.
இப்போது தான் மக்களிடம் நாட்டையும், வீட்டையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு விதைக்கப்பட்டுள்ளது.
எங்கள் கூட்டணி கட்சியான புதிய நீதிக்கட்சி இந்த திட்டத்தில் தங்களை இணைத்து பணியாற்றுகிறது. இதே போல் எல்லா கூட்டணி கட்சிகளும் இணைந்து பணியாற்றினால் இந்த திட்டம் மேலும் வெற்றி பெறும்' என இவ்வாறு அவர் பேசினார்.