சென்னையில், ரூ 1200 கோடியில் 10118 சாலைகள் சீரமைப்பு: மேயர் சைதை துரைசாமி
சென்னை: சென்னையில் உள்ள 10118 சாலைகள் ரூ.1200 கோடியில் சீரமைக்க திட்டமிடப் பட்டிருப்பதாக சென்னை மேயர் சைதை துரைசாமி நேற்று அறிவித்துள்ளார்.
நேற்று நடந்த சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பு தீர்மானங்களை மேயர் சைதை துரைசாமி வாசித்தார்.
அதில், சென்னை சாலைகள் சீரமைப்பு பற்றி கூறப்பட்டதாவது....
மொத்த சாலைகள்....
சென்னை மாநகராட்சியில் உள்ள மொத்த உட்புறச் சாலைகளின் எண்ணிக்கை 30,560, நீளம் 5,616 கி.மீட்டர். இவற்றில், நல்ல நிலையில் உள்ள மொத்த சாலைகளின் எண்ணிக்கை 12,296. பழுதடைந்துள்ள நிலையில் உள்ள சாலைகளின் எண்ணிக்கை 18,264.
ரூ1150 கோடியில்...
இந்தப் பழுதடைந்த 18,264 சாலைகளை சீர் செய்ய, இந்த நிதியாண்டின் துவக்கத்தில், முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஒதுக்கீடு செய்யப்பட்ட மெகாசிட்டி (சேமிப்பு) 1, மெகாசிட்டி-2 மற்றும் மெகாசிட்டி-3 நிதிமூலம், மாநகராட்சி மூலதன நிதியிலிருந்தும் 8146 சாலைகளை 1150 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணி வருகிற ஜனவரி மாதத்திற்குள் முடிவடையும்.
ரூ1200 கோடியில்....
மீதமுள்ள 10118 சாலைகளை, 1200 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு உகந்த வகையில் செய்திட, சம்பந்தப்பட்ட மண்டல அலுவலர்களால் மதிப்பீடு தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த மதிப்பீடுகளின் அடிப்படையில் டிசம்பர் மாத இறுதிக்குள் ஒப்பங்கள் முடிவு செய்யப்பட்டு பணி ஆணை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் வருகிற மே மாதத்திற்குள் நிறைவு செய்யப்படும்.
வெறும் ரூ645 கோடி மட்டுமே....
கடந்த 2006 முதல் 2011 வரை முன்னாள் மேயர் பதவிக் காலத்தில் சாலைப் பணிக்கென ரூ.645 கோடி மட்டுமே 5 ஆண்டுகளில் செலவிடப்பட்டுள்ளது. ஆனால் நான் பதவியேற்ற 2011-12 நிதியாண்டில், எஞ்சியிருந்து 5 மாத காலத்தில் மட்டுமே ரூபாய் 69 கோடியே 87 லட்சம் சாலைப்பணிகளுக்காக செலவிடப்பட்டுள்ளது. 2012-13 நிதியாண்டில் மட்டும் ரூபாய் 403 கோடியே 80 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.
மாநகராட்சி வரலாற்றிலேயே....
இந்த நிதியாண்டில் சென்னை மாநகராட்சியின் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு ரூபாய் 1150 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 8146 சாலைப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிதியாண்டில் மீதமுள்ள 6 மாத காலத்திற்கு ரூ.1200 கோடிக்கான 10,118 சாலைப்பணிகள் மேற் கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் டிசம்பர் மாதத்திற்குள் இறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆக மொத்தம் ரூ2823.67 கோடி....
ஆக மொத்தம் நான் பதவியேற்ற இரண்டு ஆண்டுகளில் ரூபாய் 2823.67 கோடிக்கு சாலைப் பணிகளுக்கு மட்டும் செலவிடப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
புதிய சீரமைப்பு நடைமுறை....
விரைவில், இந்தப் பணிகள் நடைபெறுவதற்காக இதுவரையில் இருந்த நடைமுறையில் ஒரு பணியின் டெண்டர் காலம் 6 மாதம் என்கிற நிலைமையை மாற்றி, பணி விரைவாக முடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒப்பந்த காலத்தை 6 மாதத்திலிருந்து 2 மாதமாக குறைத்து ஒப்பந்த நிபந்தனைகளில் மாற்றம் செய்யப்பட்டு, மாநகராட்சி வரலாற்றில் ஒரு புதிய சீரமைப்பு நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.
போர்க்கால அடிப்படையில் வேலை....
மேற்கண்ட நடவடிக்கையின் படி சென்னை மாநகராட்சிக் குட்பட்ட அனைத்து உட்புறச் (18264) சாலைகளும் புதுப்பிக்கப்பட்டு, தரமான சாலைகள் அமைக்கப்பட்டு, மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றிட, போர்க்கால அடிப்படையில் இரவு, பகலாக பணி செய்து வரும், சென்னை மாநகராட்சியின் முதன்மைச் செயலாளர் மற்றும் ஆணையர், இணை ஆணையர் (பணிகள்), மண்டல இணை/துணை ஆணையர்கள், மண்டல அலவலர்கள் மற்றும் மாநகராட்சி பொறியாளர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்' எனத் தெரிவித்தார்.