மாமன்னர் ராஜராஜ சோழன் 1030-வது சதய விழா: தஞ்சையில் கோலாகலம்
தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1030வது சதய விழா இன்று தஞ்சையில் கோலகலமாகக் கொண்டாடப்படுகிறது. கோயில் வளாகத்தில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டு கவியரங்கம், கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
உலக புகழ் பெற்று விளங்கும் பெரிய கோயிலை கட்டிய பேரரசர் ராஜராஜ சோழன் பிறந்த நாள் சதய விழாவாகக் கொண்டாடப்படுகிறது. ஐப்பசி மாதம் சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர் மா மன்னர் ராஜராஜசோழன். அவரை சிறப்பிக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு 1030வது சதயவிழா இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இதற்காக நாளை 23ம் தேதி உள்ளூர் விடுமுறையும் விடபட்டுள்ளது.
ராஜராஜ சோழனின் சதய விழாவால் தஞ்சை நகரம் முழுவதும் விழாக் கோலம் பூண்டுள்ளது. பெரிய கோயில் மின் விளக்கு அலங்காரத்தினால் ஜொலிக்கிறது.
ராஜராஜ சோழனின் சதயவிழாவையொட்டி, கோயில் வளாகத்தில் பந்தல் அமைக்கப்பட்டு கவியரங்கம், கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. பெருவுடையார் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெறும். ஓதுவார்கள் ஓத சிறப்பு ஆராதனை நடைபெற, விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
சதய விழாவில் கலந்துகொள்ள, தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் குவிந்த வண்ணம் உள்ளனர். நாளை அவரது சிலைக்கு பொது மக்கள் அனைவரும் மாலை அணிவித்து மரியாதை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து சமூகத்தைச் சேர்ந்தவர்களும் மாலை அணிவிப்பார்கள்.
நாளை காலையில் மாவட்ட ஆட்சியர் சுப்பையன் மற்றும் எம்எல்ஏ ரங்கசாமி ஆகியோர், ராஜராஜன் சோழன் சிலைக்கு மாலை அணிவிக்கிறார்கள். இதற்காக அவரது சிலை அமைந்துள்ள இடத்தில் மின்விளக்கு அலங்காரம் செய்யபட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. விழா முடிவில் அமைச்சர்கள் வைத்திலிங்கம், காமராஜ் மற்றும் அதிமுக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொள்கிறார்கள். இந்த விழாவுக்கான ஏற்பாட்டை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.