அரசியல் தலைவர்களை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும்: ராஜேஷ் லக்கானி விளக்கம்
சென்னை: சட்டசபைத் தேர்தல் நடத்தை விதி மீறல் புகார்களை வாட்ஸ்-அப் எண்ணில் தெரிவிக்கலாம் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் யாரும் எந்த அரசியல் கட்சி தலைவரையும் சந்திக்கக் கூடாது என்று கூறியுள்ள அவர், தேர்தல் விதிகளுக்கு புறம்பாக செயல்படும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அஸ்ஸாம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்குமான சட்டசபைத் தேர்தல் மே 16ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்றும், மே 19ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி நேற்று அறிவித்தார்.
தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டசபைத் தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள 30 சட்டசபைத் தொகுதிகள், கேரளாவில் உள்ள 140 தொகுதிகள் என 3 மாநிலங்களுக்கும் மே 16ம் தேதி (திங்கட்கிழமை)சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த 3 மாநிலங்களிலும் ஏப்ரல்22ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்கும். வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய ஏப்ரல்29ம் தேதி கடைசிநாள். மனுக்கள் ஏப்ரல்30ம் தேதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். மனுக்களை மே 2ம் தேதி (திங்கட்கிழமை)க்குள் திரும்ப பெறலாம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிமிடத்தில் இருந்தே நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விட்டன.
106 புகார்கள்
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது பற்றி செய்தியாளர்களிடம் ராஜேஸ் லக்கானி, தமிழக சட்டசபைத் தேர்தல் தேதி அறிவித்தவுடனே, நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டது. ஆரம்பிக்கப்பட்ட 10 நிமிடங்களிலே 3 புகார்கள் பெறப்பட்டதாக கூறினார். இதுவரை 106க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
வாட்ஸ் அப் எண்கள்
இந்த புகார்கள் பெரும்பாலானவை பேனர்கள் அகற்றப்படவில்லை, இன்னும் அரசு விளம்பரங்கள், சுவர் விளம்பரங்கள் இருக்கிறது இதை அகற்றப்படவில்லை. இதுபோன்ற புகார்கள் தான் அதிகமாக வந்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். தேர்தல் நடத்தை விதிமீறல் பற்றிய புகார்களை தெரிவிக்க வாட்ஸ்அப் எண் அளிக்கப்படும் என்றும் ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.
அவதூறு பரப்பக் கூடாது
அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்களை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வதை தவிர்க்குமாறு அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒரு மாதம் சிறை
இவற்றை கண்காணிக்க தனியாக ஊழியர்கள் நிய மிக்கப்பட்டு உள்ளனர். இதற்காக புதிதாக சாப்ட்வேட் வாங்கி அதன் மூலம் கண் காணிக்கிறோம். தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறி வாட்ஸ்-அப்பில் தலைவர்களை இழிவாக விமர்சனம் செய்தால் இந்திய தண்டனை சட்டம் 188-வது பிரிவின்கீழ் நடவடிக்கை எடுக்க வழி இருப்பதாக ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
அரசு அதிகாரிகள்
தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் யாரும் எந்த அரசியல் கட்சி தலைவரையும் சந்திக்கக் கூடாது. தேர்தல் நடத்தை விதிகளை அரசு ஊழியர்கள் சரியாக பின்பற்ற வேண்டும். தேர்தல் விதிகளுக்கு புறம்பாக செயல்படும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அன்புமணியை சந்தித்த அரசு ஊழியர் சங்கம் விளக்கம் தருமாறு ராஜேஷ் லக்கானி உத்தரவிட்டுள்ளார்.
1404 சிறப்பு படைகள்
தலைமை தேர்தல் ஆணையர் தேர்தல் தேதி அறிவித்ததும், தமிழகத்தில் பல மாவட்டங்களில் பறக்கும் படை மற்றும் வாகன சோதனை தொடங்கி விட்டது. ஒரு தொகுதிக்கு 3 பறக்கும் படை, 3 சோதனை சாவடி என 234 தொகுதிகளில் 1,404 சிறப்பு படைகள் நியமிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகளில் இவர்கள் ஈடுபடுவார்கள். ஒரு படையில் ஒரு கேமராமேன், போலீசார் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் என 4 பேர் இடம் பெற்றிருப்பார்கள்.
புதிய அறிவிப்புகள்
தமிழக அரசு சார்பில் எந்த புதிய திட்டங்கள், சலுகைகள், நிதி சலுகைகள் மற்றும் உறுதிமொழிகள், அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட எந்த பணிகளிலும் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஈடுபடக்கூடாது. ஏற்கனவே அறிவித்த திட்டங்களை, தேர்தல் அதிகாரியிடம் அனுமதி பெற்று நிறைவேற்றலாம். குறிப்பாக, வெள்ளம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா படங்கள்
பணம் கிடைக்காதவர்களுக்கு, தேர்தல் அதிகாரியிடம் அனுமதி பெற்ற பிறகே இனிமேல் வழங்க முடியும். அம்மா உணவகம், அம்மா குடிநீர் உள்ளிட்ட அரசு திட்டங்களில், அரசு கட்டிடங்களில் உள்ள முதல்வர் ஜெயலலிதா படங்களை உடனடியாக அகற்ற வேண்டும்.
பணத்திற்கு ஆவணங்கள்
அரசு சாதனைகளை விளக்கி, அரசு நிதியை பயன்படுத்தி விளம்பரங்கள் வெளியிட தடை செய்யப்படுகிறது.தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ரூ.28 லட்சம் வரை செலவு செய்யலாம். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டதால், பொதுமக்களும் தாங்கள் எடுத்துச் செல்லும் பணத்துக்கு உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்.
கடும் நடவடிக்கை
இவ்வளவு பணம் ஆவணம் இல்லாமல் எடுத்துச் செல்லலாம் என்று எந்த விதிமுறையும் இல்லை. எது எடுத்துச் சென்றாலும் உரிய ஆவணங்கள் இருந்தால், பொதுமக்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காது. தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.