சென்னை டாக்டர் வீட்டில் கொள்ளை: 107 பவுன் நகைகள் மீட்பு: வேலைக்காரி, கணவர் கைது!
சென்னை: சென்னை அண்ணாநகரில் டாக்டர் வீட்டில் கைவரிசை காட்டிய கொள்ளை கும்பலிடம் இருந்து 107 சவரன் நகை மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அண்ணா நகர், கியூ பிளாக், 15-வது தெருவில் வசிப்பவர் டாக்டர் ஆனந்தன். கடந்த 4-ஆம்தேதி ஒரு கும்பல் வீட்டுக்குள் புகுந்து டாக்டரின் மனைவி சாந்தி, வேலைக்காரி மீனா ஆகியோரை கட்டிப் போட்டு 109 பவுன் நகை ரூ. 4 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்று விட்டது.
அண்ணா நகர் போலீசார் உடனடியாக சென்று விசாரித்ததில் வேலைக்காரிக்கு இதில் தொடர்பு இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டது. இவர் மேற்கு வங்காள மாநிலம் 24 பர்கானா மாவட்டம் மாலிக்பூரைச் சேர்ந்தவர். வேலைக்காரியைப் பிடித்து விசாரித்த போது அவரது கணவர் முகமது இம்ரான் சென்னையில் தங்கி இருப்பது தெரிய வந்தது.
சென்னை அரும்பாக்கத்தில் ஒரு லாட்ஜில் சிசிடிவி காமிராவில் பதிவாகி இருந்த வீடியோவை சோதனை செய்த போலீசார், அதில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த 4 வாலிபர்கள் மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறும் காட்சியை கண்டுபிடித்தனர். அது வேலைக்காரியின் கணவரும் அவரது ஆட்களும் என்பதை போலீசார் உறுதி செய்தனர். அவர்கள் ரயிலில் கொல்கத்தா சென்றது தெரிய வந்தது. உடனே தனிப்படை போலீசார் கொல்கத்தா விரைந்தனர். ஹவுரா ரயில் நிலையத்தில் 5 பேரும் இறங்கிய போது அங்கு தயாராக இருந்த சென்னை போலீசார் அவர்களை கைது செய்தனர்.
வேலைக்காரி மீனா, கணவர் இம்ரானுடன் கொள்ளைக்கு உதவிய சமீம் என்ற காலா, முகமது சபீர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். 6 பேரும் சென்னை கொண்டு வரப்பட்டனர்.
டாக்டர் வீட்டில் கொள்ளையடித்ததை அவர்கள் ஒப்புக் கொண்டனர். அவர்களிடம் இருந்த தங்க நகைகளை போலீசார் மீட்டனர். வெள்ளி நகைகளை ஹைதராபாத்தில் ஒரு லாட்ஜில் அறை எடுத்து பதுக்கி வைத்து இருந்தனர். அதையும் போலீசார் மீட்டனர். மொத்தம் 107 சவரன் நகைகள் அவர்களிடமிருந்து மீட்கப்பட்டன.
கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் கருணாசாகர், இணை கமிஷனர் ஸ்ரீதர், அண்ணா நகர் துணை கமிஷனர் மனோகரன், உதவி கமிஷனர் நந்தகுமார், இன்ஸ்பெக்டர்கள் ஜார்ஜ் மில்லர், ஜவகர், சரவணன், மஞ்சுளா ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் திறமையாக துப்பு துலக்கி கொள்ளை கும்பலை ஒரே வாரத்தில் கைது செய்துள்ளனர்.