தமிழகத்தில் இன்று நடைபெறுவதாக இருந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் ஸ்டிரைக் வாபஸ்
108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டம் திடீர் வாபஸ் பெறப்பட்டது.
சென்னை: ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் இன்று முதல் நடைபெறுவதாக இருந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.
தமிழகம் முழுவதும் உயிருக்கு போராடி தவிக்கும் அனைவரையும் முதலுதவி செய்து மருத்துவமனையில் உரிய நேரத்தில் அனுமதித்து எண்ணற்ற உயிர்களை காப்பாற்றி வருவது 108 ஆம்புலன்ஸ் சேவை. இந்த சேவை ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு, காண்டிராக்ட் எடுத்து ஊழியர்களுக்கு சம்பளம் கொடுத்து நடத்தி வருகிறது.
ஆனால் தங்களுக்கு போதிய ஊதியம் வழங்கப்படவில்லை என்று ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கைகளை அளித்து வந்தனர். எனவே அதனை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று இரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தினையும் அறிவித்திருந்தனர்.
இந்த வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தடைவிதிக்க கோரி உயர்நீதின்றத்திலும் ஒரு பொதுநல மனு ஒன்று அவசர வழக்காக தாக்கல் செய்யப்பட்டு, அது இன்று விசாரணைக்கும் வர இருந்தது.
இந்நிலையில் 108 ஆம்புலன்ஸ் நிறுவன பிரதிநிதிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆகியோருடன் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
நேற்று காலைமுதல் நள்ளிரவு வரை இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை நீடித்தது. இறுதியில் ஒரு சுமூக முடிவு எட்டப்பட்டது. இதனையடுத்து, 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் இன்று நடத்துவதாக இருந்த வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.