சம்பள உயர்வு.. நாளை இரவு முதல் தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
நாளை இரவு முதல் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
சென்னை: ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தமிழகம் முழுவதும் நாளை இரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தினை அறிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் உயிருக்கு போராடி தவிக்கும் அனைவரையும் முதலுதவி செய்து மருத்துவமனையில் உரிய நேரத்தில் அனுமதித்து எண்ணற்ற உயிர்களை காப்பாற்றி வருவது 108 ஆம்புலன்ஸ் சேவை. இந்த சேவை ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு, காண்டிராக்ட் எடுத்து ஊழியர்களுக்கு சம்பளம் கொடுத்து நடத்தி வருகிறது.
ஆனால் தங்களுக்கு போதிய ஊதியம் வழங்கப்படவில்லை என்று ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கைகளை அளித்து வருகின்றனர். அதன்படி நாளை தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
வேலை நிறுத்தம் நாளை நடைபெற உள்ள நிலையில், முன்னதாகவே, 108 தொழிலாளர்கள் பொதுக்கூட்டம், போராட்டம் என பல வகையில் தங்களின் அழுத்தங்களை அரசுக்கு தெரிவித்து வருகின்றனர். அதன்படி, நேற்றும்கூட, கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு 65க்கும் மேற்பட்ட 108 தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஓய்வில் இருந்த 108 தொழிலாளர்கள் சீருடையுடன் வந்து தங்களின் கோரிக்கையை வலியுறுத்தினர்
இந்நிலையில், சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை இரவு முதல் தமிழகம் முழுவதும் திட்டமிட்டபடி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கம் உறுதிபட அறிவித்துள்ளது.
108 ஆம்புலன்சில் டிரைவர்கள், டெக்னீசியன்கள், மருத்துவ உதவியாளர்கள், கால்சென்டர் என பல்வேறு தரப்பில் பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களுக்கு ரூ. 17 ஆயிரத்திலிருநது ரூ. 22 ஆயிரமும் வரை வழங்க வேண்டியுள்ள நிலையில், வெறும் ரூ. 17 ஆயிரம்தான் வழங்கப்படுவதாக அச்சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
மேலும் 8 மணி நேர வேலை நேரமானது. 12 முதல் 14 மணி நேரம் வரை இருப்பதாகவும், 108 ஆம்புலன்சுகளை நிறுத்தவும், ஊழியர்கள் தங்கவும்சில மருத்துவமனைகளில் இடம் கூட இல்லை என்றும் அந்த சங்கம் வேதனை தெரிவித்துள்ளது. இதுபோன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.