ஆம்பூரில் விசாரணைக் கைதி மரணத்துக்கு எதிராக போராட்டம்- வன்முறை- 108 பேர் கைது!!
வேலூர்: ஆம்பூரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக 5 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 108 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் பூந்தோட்டம் பர்ணகாரத் தெருவைச் சேர்ந்த ஷாஜகான் மகன் ஷமில் அஹமத். பள்ளிகொண்டா குச்சிபாளையத்தைச் சேர்ந்த இளம்பெண் காணாமல் போனது தொடர்பாக, இவரை பள்ளிகொண்டா காவல் ஆய்வாளராக இருந்த மார்ட்டின் பிரேம்ராஜ் ஜூன் 15-ந் தேதி விசாரணைக்கு அழைத்துச் சென்றார்.
விசாரணையின் இடையே உடல்நிலை பாதிக்கப்பட்ட ஷமில் அஹமத் சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை மாலை இறந்தார். இதையடுத்து 500-க்கும் மேற்பட்டோர் ஆம்பூர் நகரக் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு நீதி கோரி போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்தின் போது வன்முறை வெடித்ததில் 38 போலீசார் படுகாயமடைந்தனர். போலீஸ் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. விடிய விடிய பதற்றமான சூழல் நிலவியது. நேற்று பகலில்தான் இயல்பு நிலைமை திரும்பியது.
இச்சம்பவம் தொடர்பாக வடக்கு மண்டல ஐஜி எம்.என்.மஞ்சுநாதா, ஏடிஜிபி டி.கே. ராஜேந்திரன் உள்ளிட்டோர் நேரில் விசாரணை நடத்தினர். வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் வாணியம்பாடி கலால் ஆய்வாளராகப் பணியாற்றிய மார்ட்டின் பிரேம்ராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர் சபாரத்தினம் உள்ளிட்ட 7 பேர் மீது குற்ற நடைமுறைச் சட்டப்பிரிவு 176 (1) கீழ் பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அத்துடன் மார்ட்டின் பிரேம்ராஜ் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி நீதிமன்றத்துக்கு அறிக்கை அளிக்குமாறு வேலூர் குற்றவியல் நீதிபதி ஏ.மும்மூர்த்திக்கு, மாவட்ட முதன்மைக் குற்றவியல் நீதிபதி எஸ்.சிவகடாட்சம் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதாக 108 பேரை போலீஸார் நேற்று மாலை கைது செய்தனர். ஆம்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதித்துறை நடுவர் ஆனந்தராஜ் உத்தரவிட்டார்.