ஆம்புலன்ஸ் கொடுக்க 7 மணி நேரம் தாமதப்படுத்திய மருத்துவமனை.. பரிதாபமாக உயிரிழந்த 10 ஆம் வகுப்பு மாணவி
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் தராததால் சிறுநீரகம் செயலிழந்த மாணவி உயிரிழப்பு என புகார் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம்: அரசு மருத்துவமனையில் 10 ஆம் வகுப்பு மாணவி சரிகா சிறுநீரக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். மேல் சிகிச்சைக்காக சென்னை கொண்டு செல்ல 7 மணி நேரமாக ஆம்புலன்ஸ் தராததால் மாணவி சரிகா பரிதாபமாக உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் நசரத்பேட்டையைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகள் சரிகா, பத்தாம் வகுப்பு படித்து வந்த இந்த மாணவிக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு சிறுநீரகம் செயலிழந்ததாக கூறப்படுகிறது.
இதற்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாணவியின் நிலைமை மோசமடையவே அவரது பெற்றோர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ்
ஆனால் நேரம் செல்ல செல்ல மாணவி சரிகாவின் நிலைமை மோசமடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கொண்டுசெல்ல மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் ஆம்புலன்ஸ் கேட்டுள்ளனர்.
மாணவி பரிதாபமாக உயிரிழப்பு
நேற்று பகல் ஒன்றரை மணியில் இருந்து ஆம்புலன்ஸ்க்காக காத்திருந்தனர். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் வழங்கவில்லை.
ஆட்சியர் உத்தரவு
இதையடுத்து ஆனந்தன் குடும்பத்தினர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டுள்ளனர். பின்னர் ஆட்சியரின் உத்தரவை தொடர்ந்து மாலை ஏழு மணிக்குப்பிறகே ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் சரிகா. ஆனால் செல்லும் வழியிலேயே மாணவி சரிகா பரிதாபமாக உயிரிழந்தார்.
மருத்துவமனையின் அலட்சியம்
மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் இருந்தும் நிர்வாகம் 7 மணி நேரம் தாமதப்படுத்தியதும், அலட்சியமாக இருந்ததுமே மாணவி உயிரிழப்புக்கு காரணம் என அவரது பெற்றோரும் உறவினர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.
விசாரிக்கப்படும் - சுகாதாரத்துறை
காஞ்சிபுரம் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் தராததால் சிறுநீரகம் செயலிழந்த 10ஆம் வகுப்பு மாணவி சரிகா உயிரிழப்பு தொடர்பாக விசாரிக்கப்படும் என சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். ஆம்புலன்ஸ் தர தாமதப்படுத்தியதால் பத்தாம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.