மதுரையில் பச்சிளம் குழந்தை ரூ.5 லட்சத்துக்கு விற்பனை? டாக்டர் உள்பட 6 பேர் கைது
மதுரை: மதுரையில் பிறந்து 11 நாட்களே ஆன ஆண் குழந்தையை விற்க முயன்றதாக கூறி 6 பேரை கைது செய்த போலீஸார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றர்.
மதுரையில் முடக்காத்தான் பகுதியில் பிறந்து 11 நாட்களே ஆன குழந்தை ஒன்று ரூ.5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனே கூடல் நகர் போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், மதுரை அண்ணாநகர் பகுதியில் செயல்பட்டுவரும் கோல்டன் முதியோர் இல்லம் என்ற தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும், கவிதா என்னும் மாற்றுத் திறனாளி பெண்ணை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர். அவரிடம் இருந்து, கடத்தப்பட்டதாக கூறப்படும் அந்த ஆண் குழந்தையை போலீஸார் மீட்டனர்.
அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையின் பேரில் அந்த தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சித்ரா பாய், அவரின் தம்பி பிரபாகர், தனியார் மருத்துவமனையின் மருத்துவர் சாந்தி, அவருடைய கணவர் ராஜசேகர் உள்ளிட்ட 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதன் பின்னணி என்ன என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
முன்னதாக, கடந்த 11-ந் தேதி மதுரை முடக்காத்தான் பகுதியில் உள்ள தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அந்த குழந்தையை மருத்துவமனையிலேயே பெற்றோர் விட்டுச் சென்றதாக தெரிகிறது. இதையடுத்து, அந்த குழந்தையை எடுத்த மருத்துவர் சாந்தி, தொண்டு நிறுவனத்திடம் குழந்தையை ஒப்படைத்துள்ளார் என கூறப்படுகிறது.