இன்றும் 10 விவசாயிகள் மரணம்- நாகையில் மட்டும் 7 பேர் உயிரிழப்பு!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 10 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். நாகையில் மட்டும் 7 பேர் மரணமடைந்துள்ளனர்.
சென்னை: தமிழகத்தில் விவசாயிகள் மரணம் தொடருகிறது. இன்றும் 10 விவசாயிகள் மரணமடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி நிலவுகிறது. பருவமழை பொய்த்து போனதாலும் காவிரி நீரை கர்நாடகா திறக்க மறுத்ததாலும் விவசாயம் கேள்விக்குறியாகிவிட்டது.
இதனால் விவசாயிகள் பெரும் துயரத்தில் இருக்கின்றனர். வேளாண் பயிர்கள் கருகுவதைக் கண்டு விவசாயிகள் அதிர்ச்சியடைந்து மாண்டுபோகின்றனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் மட்டுமின்றி பிற மாவட்ட விவசாயிகளும் உயிரிழக்கின்றனர். இதுவரை 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
நேற்று ஒரே நாளில் 6 விவசாயிகள் உயிரிழந்தனர். இன்றும் நாகை, அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 10 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். அதுவும் நாகை மாவட்டத்தில் மட்டும் 7 விவசாயிகள் ஒரே நாளில் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.