கறிக்கடைக்கார் வீடு புகுந்து 11 சரவன் நகை, ரூ. 40,000 கொள்ளை.. திருத்தணியில் பயங்கரம்
பீரோவிலிருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருத்தணி: திருத்தணியில் கோழிக்கடைக்காரர் வீட்டின் பீரோவை உடைத்து 11 சவரன் நகை மற்றும் ரூ.40,000 ரொக்கத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருத்தணி கம்பர் தெரு பகுதியில் வசிப்பவர் ரவிக்குமார். இவர் சித்தூர் சாலையில் கோழி இறைச்சி கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு உடல் நலம் சரி இல்லாததால் மாத்திரை சாப்பிட்டு விட்டு இவரது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது நள்ளிரவில் இவரது வீட்டில் மர்ம நபர்கள் முன்பக்க கேட்டின் வழியாக உள்ளே புகுந்துள்ளனர். கதவை உடைத்து ரவிக்குமார் படுத்திருந்த அறையில் இருந்த பீரோவை உடைத்து 11 சவரன் நகை மற்றும் 40,000 ரொக்கப்பணம் 300 கிராம் வெள்ளி பொருட்களை கொள்ளை அடித்து சென்றனர். காலையில் பீரோ உடைக்கப்பட்டு பணம், நகை கொள்ளைபோனது குறித்து ரவிக்குமார் திருத்தணி காவல் நிலையத்தில் தகவல் அளித்தார். அதன்பேரில் திருவள்ளூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு திருவள்ளூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் மோப்பநாய் உதவி கொண்டும் வழக்கு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடந்த 5 மாதத்தில் மட்டும் இந்த சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 5 வீடுகளில் தொடர் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று உள்ளன. ஆனால் இதுவரை எந்த ஒரு கொள்ளையனையும் காவல்துறை கைது செய்யவில்லை என தெரிகிறது. இதனால் திருத்தணியில் உள்ள பொதுமக்கள் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளனர். அச்சமடைந்த இந்த சூழ்நிலையில் இரவு நேரத்தில் இரவு நேரத்தில் காவல் துறையினர் அதிக ரோந்து பணி ஈடுபடுமாறும் காவல்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்