ஈரோடு அருகே 2 வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை.. 11 சவரன் நகை அபேஸ்.. ஒருவர் மண்டை உடைந்தது
அடுத்தடுத்த வீடுகளில்11 சவரன் நகை கொள்ளை நடைபெற்றுள்ளது.
Recommended Video
ஈரோடு: ஈரோடு அருகே அடுத்தடுத்த வீடுகளில் 11 சவரன் நகை கொள்ளை போனது குறித்தும், கொள்ளையர்கள் தாக்கியதில் ஒருவருக்கு மண்டை உடைந்தது குறித்தும் தாலுக்கா போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு அடுத்த கஸ்பாபேட்டை அருகே உள்ள நாதகவுண்டன்பாளையத்தை சேர்ந்த தம்பதி சிவக்குமார்-லலிதாராணி. இவர்களது ஒரே மகள், விடுமுறை என்பதால் பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு சிவக்குமார்-லலிதாராணி இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, கதவு உடைக்கும் சத்தம் கேட்டது. இதனையடுத்து, சிவக்குமார் எழுந்து வெளியே வந்தார். அப்போது இரண்டு பேர் டார்ச் லைட்டை சிவக்குமாரின் முகத்தில் அடித்து அவர் அணிந்திருந்த 4 பவுன் செயின் அறுத்துக் கொண்டனர்.
பின்னர் சத்தம் கேட்டு வெளியே வந்த லலிதா ராணியின் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலிக்கொடியையும் பறித்தனர். இதனால் சிவக்குமார் கொள்ளையர்களை தடுக்க முயன்றார். ஆனால் கொள்ளையர்கள் சிவக்குமாரை பிடித்து கீழே தள்ளி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து அவர் உடனடியாக ஈரோடு தாலுக்கா போலீசாருக்கு புகார் அளித்தார்.
இதற்கு முன்னதாக, இதே கொள்ளையர்கள் நாதகவுண்டன்பாளையம் அருகே உள்ள அரசு போக்குவரத்து நகரில் வசித்து வரும் கார்த்திக் என்பவரின் வீட்டிலும் கொள்ளையர்கள் புகுந்து நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டனர். கார்த்திக் ஈரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு பணி என்பதால் வேலைக்கு சென்று விட்டார்.
வீட்டின் பின்புறம் உள்ள கதவை உடைத்து உள்ளே வந்த கொள்ளையர்கள் பெட்ரூமில் தூங்கிக் கொண்டிருந்த சிவக்குமாரின் மாமியார் பாப்பாத்தியின் கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயற்சி செய்துள்ளனர். இதனால் பாப்பாத்தி சத்தம் போடவே, அவரது கணவர் ஆறுமுகம், கொள்ளையர்களை பிடிக்க முயற்சித்தார். ஆனால் கொள்ளையர்கள் இரும்பு கம்பியால் ஆறுமுகத்தை தாக்கினர். இதில் ஆறுமுகத்திற்கு மண்டை உடைந்து ரத்தம் வழிந்தது. இதனையடுத்து சுவர் ஏறி குதித்து கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து உடனடியாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இரண்டு வீடுகளிலும் அடுத்தடுத்து ஒரு மணி நேரத்திற்குள் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும், 2 இடங்களிலும் ஒரே மாதிரி வீட்டின் கதவு உடைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும், இரண்டு இடங்களிலும் கொள்ளையர்கள் கருப்பு பனியன், கருப்பு டிராயர் மற்றும் முகத்தில் துணியால் கட்டி மறைத்துள்ளதாகவும் ஈரோடு தாலுக்கா போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரட்டை கொள்ளை குறித்து துரித விசாரணையும் நடைபெற்று வருகிறது.