மவுலிவாக்கம் 11 மாடி கட்டட இடிப்பு அறிக்கை… ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது சி.எம்.டி.ஏ
மவுலிவாக்கத்தில் இடிந்து விழும் நிலையில் இருந்த 11 மாடி கட்டடம் நவீன தொழில் நுட்ப உதவியுடன் இடிக்கப்பட்டதன் அறிக்கையை சிஎம்டிஏ இன்று ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது.
சென்னை: சென்னை மவுலிவாக்கத்தில் ஆபத்தான நிலையில் இருந்த 11 மாடிக் கட்டடம் நேற்று முன் தினம் நவீன தொழில் நுட்பத்துடன் இடித்து தகர்க்கப்பட்டது. இது தொடர்பான அறிக்கையை ஐகோர்ட்டில் இன்று சிஎம்டிஏ தாக்கல் செய்தது.
மவுலிவாக்கத்தில் 11 அடுக்குகளை கொண்ட 2 கட்டடங்கள் அருகருகில் கட்டப்பட்டன. முழுவதுமாக கட்டி முடிக்கப்படாத அந்தக் கட்டடங்களில் ஒன்று 2014 ஆண்டு ஜுன் மாதம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் 61 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 27 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில், இடிந்து விழுந்த கட்டடம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் விதி முறைகள் மீறிக் கட்டப்பட்டுள்ள மற்றொரு 11 மாடிக் கட்டடமும் இடிக்கப்பட வேண்டும் என்றும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கின் விசாரணையில் மவுலிவாக்கத்தில் அபாய நிலையில் உள்ள 11 அடுக்கு மாடி இடிக்கப்பட வேண்டும் என்றும், அதன் அறிக்கை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப் பட்டிருந்தது.
இந்த அடிப்படையில் நேற்று முன்தினம் 11 அடுக்கு மாடி கட்டடம் நவீன தொழில் நுட்பத்துடன் இடித்து தகர்க்கப்பட்டது. இடிக்கப்பட்ட இடத்தில் சிஎம்டிஏ அதிகாரிகள் இன்று காலை ஆய்வை மேற்கொண்டனர். பின்னர், அது தொடர்பான அறிக்கையை இன்று சென்னை ஐகோர்ட்டில் அதிகாரிகள் தாக்கல் செய்துள்ளனர். அறிக்கையில், 3 நொடிகளில் கட்டடம் பாதுகாப்பாக இடிக்கப்பட்டது என்றும் இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இந்த வழக்கு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 28ம் தேதிக்கு ஒத்து வைக்கப்பட்டுள்ளது.