அடப்பாவிகளா.. 11 சிறுமிகளை பாலியல் ரீதியாக சிதைத்த 2 சிறார்கள்.. திருவண்ணாமலை காப்பகத்தில் பகீர்!
11 சிறுமிகளுக்கு 2 சிறுவர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.
Recommended Video
திருவண்ணாமலை: பெற்றோர் செய்த பாவங்கள், சூழ்நிலைகள் காரணங்களால் அனாதைகளாக திரியவிடப்பட்ட சில பெண் குழந்தைகளுக்கு தொல்லைகள் துரத்தி துரத்தி அடிக்கிறது வேதனையாக இருக்கிறது. அதற்கு திருவண்ணாமலையில் நடைபெற்ற இந்த சம்பவமும் விதிவிலக்கல்ல.
தமிழகம் முழுவதும் இயங்கி வரும் குழந்தைகள் காப்பகங்களில் போதிய வசதிகள் எல்லாம் இருக்கிறதா, குழந்தைகள் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறார்களா? ஏதேனும் குறைகள் உள்ளதா என்றெல்லாம் அரசு சார்பில் அமைக்கப்பட்ட ஒரு குழுவானது ஆய்வு செய்து வருகிறது.
அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம், வேங்கிக்கால் தென்றல் நகரில் ஒரு தனியார் நடத்திவரும் குழந்தைகள் காப்பகம் ஒன்றிலும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. கடந்த மாதம் 13ம் தேதி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, காப்பகத்தில் தங்கி வரும் சிறுவர், சிறுமிகள் அனைவரும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டு அதிகாரிகள் அதிர்ந்தனர்.
அதனால் அந்த தனியார் காப்பகத்தில் இருந்த பிள்ளைகள் அனைவரும் அரசு காப்பகத்திற்கு உடனடியாக மாற்றப்பட்டனர். அதனை தொடர்ந்து அவர்களுக்கு கடந்த 2 மற்றும் 6-ம் தேதிகளில் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது. மருத்துவ அறிக்கையும் தயாரானது. இப்போது சற்று ஆடியே போய்விட்டனர் அந்த அதிகாரிகள். ஏனெனில் தனியார் காப்பகத்தில் இருந்தபோது 11 சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருப்பதாக அறிக்கை வந்தது.
இதுகுறித்து பாதுகாப்பு அலுவலர் ரேணுகாதேவி திருவண்ணாமலை அனைத்து மகளிர்காவல் நிலையத்தில் புகார் செய்தார். வழக்கும் பதிவு செய்யப்பட்டு, சிறுமிகளிடம் விசாரணையும் தனித்தனியாக நடத்தப்பட்டது. இப்போது சிறுமிகள் சொன்ன தகவலை கேட்டதும் அதிகாரிகளுக்கு தூக்கி வாரிப்போட்டது. அந்த சிறுமிகளை இப்படி சீரழித்து நாசப்படுத்தியது 2 சிறுவர்களாம். இவர்கள் அண்ணன்-தம்பி வேறாம். இப்போது அந்த 2 சிறுவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தனியார் காப்பக உரிமையாளரிடம் விசாரணையும் நடைபெற்று வருகிறது.