ஓசூரில் ஐடி ஊழியர் வீட்டின் ஜன்னல் கம்பிகளை உடைத்து துணிகரம்.. 110 சவரன் நகைகள் அபேஸ்!
வீட்டினுள் புகுந்து 110 சவரன் கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Recommended Video
ஓசூர்: ஓசூரில் ஐ.டி. ஊழியரின் வீட்டின் ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் பீரோவில் இருந்த 110 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ளது பெடறப்பள்ளி பகுதி. இங்கு தனது தாயார் அமுதேஸ்வரியுடன் வசித்து வருபவர் யுவராஜ். இவர் பெங்களூரில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் யுவராஜ் வழக்கம்போல் நேற்று வேலைக்கு சென்றுவிட்டார்.
ஆனால் நேற்று இரவும் தொடர்ந்து வேலை இருப்பதாக யுவராஜ் கூறியதால், வீட்டிற்கு வர இயலாது என்று கூறிவிட்டு அங்கேயே தங்கியுள்ளார். இதையடுத்து வீட்டில் தனியாக இருந்த அவருடைய தாயார் அமுதேஸ்வரி, பக்கத்திலுள்ள தன் மகள் வீட்டில் சென்று நேற்றிரவு தங்கிவிட்டார்.
இதனை நோட்ட மர்மநபர்கள் சிலர் யுவராஜ் வீட்டின் பின்பக்கமாக உள்ள ஜன்னல் கம்பிகளை உடைத்து, உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் பீரோவிலிருந்த 110 சவரன் நகைகளையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
தூங்கி எழுந்து இன்று காலை தன் வீட்டிற்கு வந்த அமுதேஸ்வரி, ஜன்னல் கம்பிகள் உடைக்கப்பட்டிருப்பதையும் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக தனது மகளுக்கு இதுகுறித்து தகவல் அளித்ததுடன், சிப்காட் போலீசாருக்கும் புகார் கொடுத்தார். விரைந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து, தடயங்களையும் சேகரித்து தப்பியோடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.