எடப்பாடி அரசுக்கு 110 எம்.எல்.ஏக்கள் மட்டுமே ஆதரவு... பெரும்பான்மை பலம் இல்லாமல் நீடிக்கும் ஆட்சி
எடப்பாடி அரசுக்கு 110 எம்.எல்.ஏக்கள்தான் ஆதரவாக உள்ளனர்.
Recommended Video
சென்னை: தினகரன் அணிக்கு மேலும் ஒரு எம்.எல்.ஏ. தாவிய நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு 110 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுதான் இருக்கிறது. பெரும்பான்மை பலம் இல்லாத ஆட்சியாகவே எடப்பாடி அரசு நீடிக்கிறது.
234 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட தமிழக சட்டசபையில் பெரும்பான்மைக்கு தேவை 117 எம்.எல்.ஏக்கள். இரட்டை இலை தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த தேர்தல் ஆணையம், முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசுக்கு 111 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருக்கிறது என குறிப்பிட்டிருந்தது.
பெரும்பான்மை கிடையாது
அதனடிப்படையில் இரட்டை இலை சின்னம், ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிக்கு ஒதுக்கப்பட்டது. இருப்பினும் எடப்பாடி அரசுக்கு பெரும்பான்மைக்கான 117 எம்.எல்.ஏக்கள் இல்லை என்பதை தேர்தல் ஆணைய தீர்ப்பு பட்டவர்த்தனமாக போட்டுடைத்தது.
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. எஸ்கேப்
இதனால் எடப்பாடி அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் ஆளும் தரப்பில் இருந்து கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு இன்று தினகரன் அணிக்கு தாவிவிட்டார்.
எடப்பாடிக்கு 110 எம்.எல்.ஏ.க்கள்
தற்போது எடப்பாடி அரசுக்கான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு 110 தான். இருந்தபோதும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் திமுக, காங்கிரஸில் உள்ள ஸ்லீப்பர் செல்கள் மூலம் அரசு பெரும்பான்மையை நிரூபித்து விடும் என நம்பிக்கையோடு இருக்கிறது ஆளும் தரப்பு.
அங்கிட்டும் இங்கிட்டும் அறுவடை
அதிமுகவில் தினகரன் ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படுகிற ஸ்லீப்பர் செல்களை அரசு தரப்பு 'கவனிப்பதில்லை'. இந்த ஸ்லீப்பர் செல்களும் இங்கிட்டும் அங்கிட்டும் அறுவடை செய்யலாம் என இலவு காத்திருந்தனர். ஆனால் அரசு தரப்பு தூக்கி எறிவதில் முனைப்பாக இருப்பதால் தினகரனிடம் தஞ்சமடைய தொடங்கியுள்ளனர் இந்த ஸ்லீப்பர் செல்கள்.