களை கட்டிய காணும் பொங்கல்: மெரீனாவில் தொலைந்த 112 குழந்தைகள் மீட்டு ஒப்படைப்பு
சென்னை: சென்னையில் வழக்கமான உற்சாகத்தோடு காணும் பொங்கல் களை கட்டியது. கடற்கரை மற்றும் பூங்காக்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
சென்னை தீவுத்திடல், மெரீனா, வண்டலூர் பூங்கா என மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் திரண்டனர். கூட்ட நெரிசலில் காணாமல் போன 112 குழந்தைகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்களில் குவிந்த மக்கள் உற்றார் உறவினர்களை கண்டு உற்சாகமாக காணும் பொங்கலை கொண்டாடினர்.
உற்சாக கொண்டாட்டம்
கடற்கரைகள், பூங்காக்கள் உள்பட சுற்றுலா தலங்களுக்கு, பொதுமக்கள் தங்கள் சொந்த-பந்தங்கள், நண்பர்களோடு ஒற்றுமையாக கூடி சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் வெளிப்படுத்தி உற்சாகத்தோடு கொண்டாடும் காணும் பொங்கல் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.
மெரீனாவில் கூட்டம்
சென்னை பெசன்ட் நகர் மெரீனா கடற்கரையில் காலை முதலே கூட்டம் அலைமோதியது. மாலை நேரத்தில் கடற்கரை மணல்பரப்பு முழுவதும் மனித தலைகளாகவே காணப்பட்டது.
மாட்டுவண்டி பூட்டிகிட்டு
சென்னை அருகில் வசிக்கும் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் சிலர் வண்டி மாடு பூட்டிக்கொண்டு குடும்பத்துடன் உற்சாகமாக கடற்கரை சாலைகளில் வலம் வந்தனர்.
உணவுகளை பகிர்ந்த உறவுகள்
வீட்டிலேயே சுவையான உணவுகளை சமைத்து எடுத்துக் கொண்டு வந்து கடற்கரையில் உறவினர்களோடு உண்டு மகிழ்ந்தனர்.
கலங்கரை விளக்கத்தில் கூட்டம்
சாதாரண நாட்களிலேயே கலங்கரை விளக்கத்தைக் காண கூட்டம் அலைமோதும். காணும் பொங்கல் தினமான நேற்று 4500 பேர் கலங்கரை விளக்கத்தில் எறி கடற்கரையின் அழகை கண்டு ரசித்தனர்.
தொலைந்த குழந்தைகள்
கடற்கரையில் கூட்ட நெரிசலில் பெற்றோரை விட்டு பிரிந்த 112 குழந்தைகளை மீட்டு போலீசார் உரியவர்களிடம் ஒப்படைத்தனர். சில குழந்தைகள் நீண்டநேரம் அழுது கொண்டே இருந்தன.
பொழுது போக்கு மையங்கள்
பாம்பு பண்ணை, முதலை பண்ணை, முட்டுகாடு படகு சவாரி இல்லம், வள்ளுவர் கோட்டம் உள்பட சென்னை நகரில் உள்ள முக்கிய சுற்றுலாதலங்களிலும், வி.ஜி.பி. உள்பட தனியார் பொழுதுபோக்கு பூங்காக்கள், திரையரங்குகள், சர்க்கசிலும் காணும் பொங்கல் வழக்கமான உற்சாகத்தோடு களைகட்டியது.
வண்டலூரில் 1லட்சம் பேர்
சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியியல் பூங்காவில் காலை முதல் மாலை வரை சுமார் 1லட்சம் பார்வையாளர்கள் வந்திருந்து வனவிலங்குகளுடன் காணும் பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர்.
பெண்களுக்கு அனுமதி
ஈரோடு வ.உ.சி.பூங்காவில் காணும் பொங்கல் களை கட்டியது. இந்த காணும் பொங்கலில்பெண் களுக்கு மட்டுமே அனுமதி. ஆண்களுக்கு உள்ளே செல்ல அனுமதி கிடையாது.
பெண்கள் கூட்டமாக கூடி கும்மி அடித்தும் கோலாட்டம் ஆடியும் மகிழ்ந்தனர். பந்து விளையாட்டு, ரிங் பால் போட்டி, கபடி போட்டி என பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு கலக்கினர்.சிறுமிகளுடன் பெண்கள் சறுக்கு விளையாடி மகிழ்ந்தனர்.