113 அரசுப் பள்ளிகள் பிளஸ்டூ தேர்வில் 'சென்டம்' போட்டு சாதனை...!
சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு பிளஸ்டூ தேர்வில் 113 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியைக் கொடுத்து அசத்தியுள்ளன.
தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவச் செல்வங்களும் படிப்பில் அசத்துகின்றனர். அவர்களுக்கும் சகல வசதிகளும் கிடைக்க ஆரம்பித்திருப்பதால் படிப்பில் கெட்டியாகி வருகின்றனர்.
பல ஊர்களில் முறையான அடிப்படை வசதி கூட இல்லாத நிலை இருந்தும் கூட மாணவர்கள் படிப்பதில் சோடை போகாமல் தேர்ச்சியிலும் ரேங்க் பெறுவதிலும் கலக்குகின்றனர்.
113 பள்ளிகள் சென்டம்
இந்த ஆண்டு பிளஸ்டூ தேர்வில் தமிழ்நாடு முழுவதும் 113 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
5 சதவீதம் அதிகரிப்பு
கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த முறை அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 5 சதவீதம் அதிகரித்துள்ளது சந்தோஷமான செய்தியாகும்.
கடந்த ஆண்டு 79 சதவீதம்தான்
கடந்த ஆண்டு 79 சதவீதமாக இருந்த தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டு 84.1 சதவீதமாக உயர்ந்து உள்ளது.
113 பள்ளிகள் அபாரம்
தமிழ்நாடு முழுவதும் 2,403 அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் 113 அரசு பள்ளிகள் 100 சதவிதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
சிறப்பு வகுப்புகளே காரணம்
இது பற்றி தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வரமுருகன் கூறுகையில், இந்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்து அரசு பள்ளிகளையும் மாணவ - மாணவிகளையும் ஊக்குவித்தனர். படிப்பில் பின்தங்கிய மாணவ - மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டது. இதுவே தேர்ச்சி விகிதம் அதிகரிப்புக்கு காரணம் என்றார்.