+1ல் ஃபெயிலானால் படிப்பு கெடாது.. 12ம் வகுப்பை தொடரலாம்.. செங்கோட்டையன் உறுதி
பிளஸ் 1 வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்தால், படிப்பை நிறுத்தாமல் 12ம் வகுப்பை தொடரும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
சென்னை: நடப்பு கல்வியாண்டு முதல் பிளஸ் 1 மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
பிளஸ் டூ மதிப்பெண்களும் 600 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மாணவர்கள் தேர்வு நேரம் 3 மணி நேரத்தில் இருந்து இரண்டரை மணி நேரமாக குறைக்கப்பட உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
பிளஸ் 1 தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள், தொடர்ந்து பிளஸ் 2 வகுப்பில் படிப்பார்கள் என்றும் பிளஸ் 1ல் தோல்வியடையும் மாணவர்களுக்கு ஜூன், ஜூலை மாதத்தில் இடைத்தேர்வு நடத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
மேலும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு இணையாக புதிய பாடப்புத்தகங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். நீட் தேர்வு உள்ளிட்ட தேசிய அளவில் நடைபெறும் தேர்வில் தமிழக மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்ததார்.
சிறந்த கல்வியாளர்களை வைத்து பாடத்திட்டத்தில் மக்கள் மன ஓட்டத்துக்கு இணையாக மாற்றங்கள் கொண்டு வரப்படும். அனைத்துத் தரப்பினர் கருத்தும் பாடத்திட்டம் வரைவுக்குப் பெறப்படும். புதிய பாடத்திட்டத்தை பயிற்றுவிக்க ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும் என்று செங்கோட்டையன் கூறினார்.