ப்ளூவேல் விளையாட்டில் 13 நிலைகள் விளையாடிய வேலூர் மாணவன் மீட்பு!
வேலூரில் ப்ளூவேல் விளையாடிய 11ம் வகுப்பு மாணவனை கண்டுபிடித்து ஆசிரியர் போலீசாரின் கலந்தாய்வுக்கு அனுப்பி வைத்தார்.
வேலூர் : இளைஞர்களின் உயிருக்கு உலை வைக்கும் ப்ளூவேல் விளையாட்டில் 13 நிலைகள் விளையாடிய வேலூர் 11ம் வகுப்பு மாணவனை மீட்டு ஆசிரியர் கலந்தாய்விற்காக அனுப்பி வைத்தார்.
இளைஞர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் ப்ளூவேல் விளையாட்டிற்கான லிங்குகளை இணைதளத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதே போன்று சமூக வலைதளங்களில் இருந்து இந்த விளையாட்டிற்கான லிங்குகளை உடனடியாக டெலிட் செய்யவும் மத்திய அரசின் தொலைதொடர்புத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
இந்நிலையில் மதுரையில் முதல் உயிர்ப்பலி வாங்கிய ப்ளூவேல் விளையாட்டால், தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வேலூரில் 11ம் வகுப்பு மாணவன் ஒருவன் ப்ளூவேல் படத்தை கையில் கிழித்து வரைந்திருப்பதை ஆசிரியர் கண்டுள்ளார்.
இதனையடுத்து அந்த ஆசிரியர் மாணவனிடம் இது குறித்து விசாரித்த போது, ப்ளூவேல் விளையாட்டில் 13 நிலைகளை அவன் விளையாடியுள்ளதை ஒப்புகொண்டுள்ளான். தற்போது ப்ளூவேல் விளையாட்டில் இருந்து மாணவனை மீட்க ஆலோசனை வழங்கும் போலீசார் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.