பொங்கலுக்கு பஸ்ஸில் போனவர்கள் மட்டும் 12.10 கோடி... அரசுக்கு வருமானம் ரூ 148 கோடி!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு இயக்கிய சிறப்பு பேருந்துகள் மூலமாக அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.148 கோடி வருமானம் கிடைத்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்கு கடந்த 9-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரையிலான 7 நாள்களில் மொத்தம் 12 ஆயிரத்து 624 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதன் மூலம் அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.148.75 கோடி வசூலாகக் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை (ரூ.145.53 கோடி) காட்டிலும் ரூ.3.22 கோடி அதிகமாகும்.
அதிக பயணிகள்
இதேபோல் சிறப்பு பேருந்துகளில் பயணம் செய்த பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 11.93 கோடியாக இருந்த பயணிகளின் எண்ணிக்கை, போக்குவரத்துத் துறை மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளின் காரணமாக தற்போது (2016) 12.10 கோடியாக அதிகரித்துள்ளது.
அரசுப் பேருந்துகள் தவிர, பொங்கலுக்காக தனியார் பேருந்துகள், ஆம்னி பஸ்கள், ரயில்களிலும் ஏராளமானோர் பயணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.