முதலாமாண்டு மாணவரை ராகிங் செய்த புகாரில் மருத்துவ மாணவர்கள் 12 பேர் சஸ்பென்ட்
சென்னை: முதலாமாண்டு மாணவரை ராகிங் செய்ததாக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 12 பேர் நேற்று சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி, மத்திய தொழிலாளர் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் முதலாமாண்டு சேர்ந்துள்ள மாணவர் ஒருவரை இரண்டாமாண்டு மாணவர்கள் 12 பேர் சேர்ந்து ராகிங் கொடுமை செய்ததாகவும், இதனைத் தொடர்ந்து ராகிங்கில் ஈடுபட்ட மாணவர்களை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் இடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், இது குறித்து மருத்துவமனை தரப்பினர் கூறுகையில், "மாணவர்களுக்குள் சிறிய பிரச்சினை ஏற்பட்டது. கல்லூரி நிர்வாகமே அதனை தீர்த்துவிட்டது. இதனை வெளியில் கூற இயலாது' என்றனர்.
ராகிங் தண்டனை என்ன?
கல்வி நிறுவனத்தில் இருந்து டிஸ்மிஸ் அல்லது சஸ்பெண்ட் செய்தல், விடுதியில் இருந்து நீக்குதல், தேர்வு முடிவை நிறுத்தி வைத்தல், தேர்வு எழுத தடை விதித்தல், ரூ.25 ஆயிரம் அபராதம் என குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனமே தண்டனை கொடுக்கலாம்.
காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால், ஓராண்டு முதல் 7 ஆண்டுகள் வரை நீதிமன்றம் மூலம் தண்டனை கிடைக்கும்..