கோவில் திருவிழா முன்பகை- சீர்காழி மோதலில் போலீஸ் ஏட்டு உட்பட 12 பேர் படுகாயம்!
சீர்காழி: நாகை மாவட்டத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவில் இரு கிராமத்தினருக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தால் ஒரு போலீஸ்காரர் உட்பட 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
சீர்காழியை அடுத்த திருவெண்காடு அருகே கீழமூவர்கரை கிராமம் உள்ளது.
இந்த கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்தது. இதில் தினந்தோறும், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.
இரண்டு கிராமத்தினர் மோதல்:
இந்த நிலையில் கடந்த 12 ஆம் தேதி நடைபெற்ற கலை நிகழ்ச்சியை காண வந்த அகரபெருந்தோட்டம் கிராமத்தினருக்கும், கீழமூவர்கரை கிராமத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
வழிமறித்து தாக்குதல்:
இதனால் இரு கிராமத்தினர் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று கீழமூவர்கரை மீனவர் கிராமத்தை சேர்ந்த சிலர் பூம்புகார் சென்றுவிட்டு, அகரபெருந்தோட்டம் கிராமம் வழியாக ஊருக்கு வந்து கொண்டு இருந்தனர். அப்போது அகரபெருந்தோட்டம் கிராமத்தினர் சிலர் அவர்களை வழிமறித்து தாக்கியதாக கூறப்படுகிறது.
கல், கட்டையால் தாக்குதல்:
தாக்குதலில் காயம் அடைந்தவர்கள், கீழமூவர்கரை கிராமத்திற்கு சென்று, இதுகுறித்து அங்குள்ளவர்களிடம் தெரிவித்தனர். உடனே கீழமூவர்கரை கிராம மக்கள் 100 பேர் அகரபெருந்தோட்டம் கிராமத்திற்கு சென்றனர். அப்போது 2 கிராம மக்களிடையே தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் கல் மற்றும் கட்டையால் தாக்கி கொண்டனர்.
12 பேர் படுகாயம்:
ஒரு டிராக்டரும் சேதப்படுத்தப்பட்டது. இந்த மோதலில் காயம் அடைந்த கீழமூவர்கரை கிராமத்தை சேர்ந்த சந்திரன், பாலகிருஷ்ணன், இளங்கோவன் , பிரவீன், குமார், சித்ரவேல், சசிக்குமார், கிருஷ்ணசாமி, குணசேகரன் ஆகிய 9 பேரும் சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதி:
இதேபோல், காயம் அடைந்த அகரபெருந்தோட்டம் கிராமத்தை சேர்ந்த மணி, ராஜேஷ் ஆகியோர் சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், காயம் அடைந்த பாரதி திருவெண்காடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடரும் பதட்டம்:
மோதல் குறித்த தகவல் கிடைத்ததும் திருவெண்காடு போலீஸ் ஏட்டு செல்வராஜ் மற்றும் போலீசார் அங்கு சென்றனர். அப்போது கல்வீசப்பட்டதில் செல்வராஜ் காயமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.