ராத்திரி தீக்குளிக்கப் போறேன் பாரு.. சித்தியிடம் விளையாடிய சிறுவன் பரிதாப பலி #selfimmolation
சென்னை: தனது சித்தியிடம் நான் தீக்குளிக்கப் போறேன் பாரு என்று கூறிய சிறுவன் சொன்னபடி தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சி. சத்ய பாஸ்கருக்கு வயது 12 ஆகிறது. மதுரையைச் சேர்ந்தவன். குணாதிசய குறைபாடு உள்ள சிறுவன். இதனால் படிப்பு வரவில்லை. பள்ளிப் படிப்பை நிறுத்திய பெற்றோர் மன உளைச்சலில் இருந்து வந்தனர். இந்த நிலையில் சென்னை மதுரவாயலில் வசித்து வரும் பாஸ்கரின் சித்தி தனலட்சுமி, இங்கு வந்து இருக்கட்டும் என்று கூறி பாஸ்கரை அழைத்து வந்து பார்த்துக் கொண்டார்.
வந்த இடத்திலும் பாஸ்கர் ஏதாவது செய்து கொண்டே இருந்தான். இந்த நிலையில் நேற்று இரவு தனது சித்தியுடன் பேசிக் கொண்டிருந்த பாஸ்கர் திடீரென நான் இன்னிக்கு ராத்திரி சரியா 10.30 மணிக்கு தீக்குளிக்கப் போறேன் என்று கூறியுள்ளான். இதைக் கேட்ட தனலட்சுமி, உனக்கு வேறு வேலையே இல்லை என்று கூறி விட்டு வீட்டு வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
ஆனால் சிறுவன் பாஸ்கர் யாருக்கும் தெரியாமல் மொட்டை மாடிக்குப் போயுள்ளான். அங்கு போய் சரியாக 10.30 மணிக்கு தனது உடலில் கெரசினை ஊற்றிக் கொண்டு தீ வைத்து விட்டான். அவன் போட்ட அலறலைக் கேட்டு தனலட்சுமியும் மற்றவர்களும் மாடிக்கு ஓடினர். அங்கு கரிக்கட்டையாய் கிடந்தான் சிறுவன் பாஸ்கர். அலறி அடித்தபடி அவனை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
பலத்த தீக்காயத்துடன் இருந்த பாஸ்கருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் பரிதாபமாக உயிரிழந்தான் பாஸ்கர்.
6வது வகுப்பு வரைதான் படித்துள்ளான் பாஸ்கர். தனது வீட்டில் சரியாக இல்லாமல் இருந்ததால் அவனை தனது வீட்டுக்கு அழைத்து வந்தார் தனலட்சுமி. வந்த இடத்திலும் கூட ஏதாவது செய்து கொண்டே இருப்பான், மிரட்டியபடி இருப்பான். அதுபோலத்தான் கூறுவதாக நேற்று அசட்டையாக இருந்து விட்டனர். ஆனால் சொன்னபடி செய்த பாஸ்கரின் செயல் அனைவரையும் அதிர வைத்துள்ளது.
பாஸக்கரின் தந்தை வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அவரது தாயாரும், இரு அண்ணன்களும் மதுரையில் உள்ளனர்.