12ம் ஆண்டு சுனாமி தினம்… மெரினா கடற்கரையில் பொதுமக்கள் பேரணி.. கண்ணீர் அஞ்சலி
சுனாமி தமிழகத்தைச் சுழற்றி எடுத்த 12ம் ஆண்டான இன்று மெரினா கடற்கரையில் பொதுமக்கள் பேரணி நடத்தினார்கள்.
சென்னை: சுனாமியில் உயிரிழந்த ஆயிரக்கணக்கானோருக்கு, சென்னை மெரினா கடற்கரையில் உறவினர்கள், பொதுமக்கள் பேரணியாக சென்று கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
கடந்த 2004ம் ஆண்டு இதே நாளின் அதிகாலையில் இந்தோனேஷியாவில் உள்ள சுமத்ரா தீவில் கடலுக்கு அடியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி பேரலை படுபயங்கரமாக மேலேழுந்து கடலோரம் உள்ள நகரம், கிராமம் என அனைத்தை சுருட்டிக் கொண்டு கடலுக்குள் எடுத்துச் செல்வது போல் தாக்கியது.
அதிபயங்கரமாக மேலேழுந்த பேரலைகள், கடற்கரையோரங்களில் வாழ்ந்தவர்கள், வசித்தவர்கள், நடந்தவர்கள், நின்றிருந்தவர்கள் என ஒருவரையும் விட்டு வைக்காமல் அனைவரையும் பலி கொண்டது. இதனால் சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் உயிரிழிந்தனர். இந்தோனேஷியா, இலங்கை, தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
தமிழகத்தைப் பொருத்தவரை, சென்னை, கடலூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி மாவட்டங்களில் மட்டும் பல ஆயிரம் பேர் மரணித்தனர். உறவினர் யாரும் சென்று கண்டுபிடித்துவிட முடியாத அளவிற்கு குவியல் குவியலாக கிடந்த உடல்கள் மொத்தமாக அள்ளப்பட்டு ஒரே குழிக்குள் போட்டு புதைக்கப்பட்டன.
அந்தக் கொடுமை நடைபெற்று இன்று 12 ஆண்டுகள் ஆகின்றன. இந்தத் தினத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் என அனைவரும் தமிழகம் முழுவதும் கடற்கரையோரங்களில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் சென்னை மெரினா கடற்கரையில் இன்று 500க்கு மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் மரணம் அடைந்தவர்களின் உறவினர்கள் பேரணியாகச் சென்று கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.