காஞ்சிபுரத்தில் ஆண் குழந்தை பிரசவித்த 12-ம் வகுப்பு மாணவி... போலீஸ் விசாரணை
காஞ்சிபுரத்தை சேர்ந்த 12வது படிக்கும் மாணவிக்கு குழந்தை பிறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அருகே உள்ள மாங்காட்டை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்து உள்ளது. இந்த சம்பவத்தால் அந்த பெண்ணின் பெற்றோர் உட்பட அப்பகுதி மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
காஞ்சிபுரம் அருகே உள்ள மாங்காட்டை சேர்ந்த மாணவி பூந்தமல்லியில் உள்ள அரசுப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த இரு தினங்களுக்கு முன் தனது தாயாரிடம் வயிறு வலிப்பதாக சொன்னதால், மாணவியை பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் அவர்களது பெற்றோர் சேர்த்து உள்ளனர்.
அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள், மாணவி எட்டு மாத கர்ப்பமாக இருப்பதாகவும், அதனாலே அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு உள்ளதாகவும் தெரிவித்ததை அடுத்து, மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து வலி மீண்டும் அதிகமானதால், மாணவி சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நேற்று முன் தினம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை குறை பிரசவத்தில் பிறந்து உள்ளதால், மருத்துவர்கள் குழந்தையை தீவிர கண்காணிப்பில் வைத்து உள்ளனர்.
மாணவியிடம் நடந்த விசாரணையில், தான் வீட்டில் தனியாக இருந்தபோது மர்மநபர் ஒருவர் வீடு புகுந்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், பயந்து போய் இதை தாயாரிடம் சொல்லாமல் மறைத்ததாகவும், ஆனால் தான் கர்ப்பமாகி இருப்பது பற்றி தனக்கு தெரியவில்லை எனவும் கூறி உள்ளார்.