சத்துணவு முட்டை சாப்பிட்ட 13 குழந்தைக்கு வாந்தி, மயக்கம் - ஆத்தூர் அருகே பரபரப்பு
சேலம்: சேலம் அருகே பள்ளியில் சத்துணவு முட்டை சாப்பிட்ட 13 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் ஈச்சம்பட்டி கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் உள்ள சத்துணவு மையத்தில் 29 மாணவ, மாணவிகளுக்கு மதிய நேரத்தில் சத்துணவு வழங்கப்படுகிறது.
வழக்கம் போல நேற்றும் மாணவ, மாணவியர் சத்துணவு சாப்பிட்டனர். சத்துணவுடன் முட்டை மற்றும் கொண்டை கடலையும் வழங்கப்பட்டது. இதை சாப்பிட்ட மாணவர்கள் மாலையில் பள்ளி முடிந்து வழக்கம் போல் வீட்டிற்கு சென்றனர்.
மாலை 6.30 மணியளவில், செந்தில் என்பவரது மகள் சத்யபிரியா(6) என்ற குழந்தைக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து பள்ளியில் சத்துணவு, முட்டை சாப்பிட்ட அதே பகுதியைச் சேர்ந்த தன்யா(5), சகானா(9), தனு(10), சிவரஞ்சனி(9), கிருத்திகா(6), கார்த்திகேயன்(7), ஜெயகுமார்(10), ஞானதமிழரசன்(5), பாலமுருகன்(9), சந்துரு(9), விஸ்வநாதன்(9), சங்கர்(10) ஆகியோருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
உடனடியாக அவர்கள் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது தொடர்பாக மல்லியகரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.