சேலம் சிறையில் பதட்டம்.. கோகுல்ராஜ் கொலை வழக்கில் 13 கைதிகள் உண்ணாவிரதம்.. ஜாமீன் ரத்தானதால்
ஜாமீன் ரத்து செய்யப்பட்டதால் 13 கைதிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
சேலம்: கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஜாமீன் மறுக்கப்பட்ட 13 கைதிகளும் சேலம் மத்திய சிறையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 2015-ஆம் ஆண்டு சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில், சங்ககிரியை சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது சகோதரர் தங்கதுரை, உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஜோதிமணி என்ற பெண் இறந்து விட்டார். யுவராஜ் திருச்சி மத்திய சிறையிலும், அவரது ஓட்டுனர் அருண் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, 'ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள, மற்ற 14 பேரும் நீதிமன்றத்தில் நேற்று ஆஜராக வேண்டும் என, நாமக்கல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதில், செல்வராஜ் என்பவர் மட்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றுள்ளதால் அவர் ஆஜராகவில்லை. அதனால் மீதமுள்ள 13 பேரும் ஆஜராகினர்.
அப்போது, வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்காததாலும், உரிய நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜராக காரணத்தினாலும் 13 பேரின் ஜாமீனையும் ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, அனைவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், ஜாமீன் மறுக்கப்பட்ட 13 கைதிகளும் சேலம் மத்திய சிறையில் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களுடைய ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். கைதிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருவது சிறைத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.