கோயம்பேட்டில் அதிரடி.. கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைத்த 13 லாரி மாம்பழங்கள் பறிமுதல்
சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில் கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 13 லாரி அளவுள்ள மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோயம்பேடு பழ மார்க்கெட்டில் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் கால்சியம் கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக சுகாதார துறைக்கு புகார் வந்தது.
இதையடுத்து, அதிகாரிகள் பல கடைகளில் இன்று ஆய்வு நடத்தினர். அப்போது 13 லாரி அளவுள்ள மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
'கார்பைடு கற்கள் வைத்து பழுக்க வைக்கப்பட்ட பழங்களை சாப்பிடுவதால் வயிற்று போக்கு, குடல், தொண்டையில் புண் ஏற்படுகிறது. இதுபோன்று கால்சியம் கார்பைடு கற்கள் வைத்து பழங்களை பழுக்க வைக்க கூடாது என வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம். எங்களது ஆய்வு பணி தொடரும்'' என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஏப்ரல் மாதம் இதேபோல கோயம்பேட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள் 3 ஆயிரம் கிலோ எடையுள்ள மாம்பழங்களை பறிமுதல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.