இது தவளைக் காதல்.. மனைவியைக் கவர ஒற்றைக்கால் நடனமாடும் தவளை இனங்கள் கண்டுபிடிப்பு
சென்னை: நடனங்களில் பல வகை உண்டு.பரதநாட்டியம், மோகினி ஆட்டம், குச்சுப்புடி, கதக், ஒடிசி என்று உங்களுக்கு எல்லா வகையான நடனங்கள் பற்றியும் தெரிந்திருக்கலாம்.
ஆனால், தவளைகளின் நடனம் பற்றி யாருக்காவது தெரியுமா? சிலர் தவளை போல ஆடுவதைச் சொல்லவில்லை. நிஜமாகவே தவளைகள் ஆடும் காதல் நடனம் பற்றியது இது. ஆம், தவளைகளும் நடனமாடும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
குறிப்பாக ஆண் தவளைகள்தான் நடனத்தில் "எக்ஸ்பர்ட்" என்றும் கண்டறிந்துள்ளனர்.
நடனமாடும் தவளைகள்:
நடனமாடக்கூடிய 14 புதிய தவளை இனங்களை தென்னிந்தியாவிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். சிலோன் ஜர்னல் ஆஃப் சயன்ஸ் என்ற பத்திரிக்கையில் இந்த புதிய இனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
பின்னங்கால் நடனம்:
தன்னுடைய இணையைக் கவர்வதற்காக ஆண் தவளைகள் இந்த வித்தியாசமான நடன முறையைக் கையாளுகின்றன.பின்னங்கால்களை லேசாக விரித்து, விரித்து வாயைக் குவித்து இந்த நடனத்தை ஆடி பெண் தவளைகளைக் தன்வசம் இழுக்கின்றன.
மேற்குத் தொடர்ச்சி மலை:
மகாராஷ்ட்ரா முதல் தென்குமரி வரைக் காணப்படும் மேற்குத் தொடர்ச்சிமலையில் இந்த வகைத் தவளைகள் அதிக அளவில் காணப்படுகின்றன.
மில்லியன் ஆண்டுகள்:
மத்திய அமெரிக்காவிலும், கிழக்கு ஆசியாவிலும் கூட இத்தகைய தவளைகள் காணப்பட்டாலும் இந்த இந்தியத் தவளை இனங்களிதான் 85 மில்லியன் ஆண்டுகளாக சரியான பரிணாம வளர்ச்சிப் பெற்றுள்ளன.
தவளை மனிதர் தாஸ்:
இந்த தவளை இனங்களைப் பற்றிய ஆராய்ச்சியை தொடங்கியவர் இந்தியாவின் தவளை மனிதர் என்று அழைக்கப்படும் டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் சத்தியபாமா தாஸ் விச்சு என்பவர் ஆவார்.கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக தவளை இனங்கள் பற்றிய ஆராய்ச்சிகளில் இவர் ஈடுபட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மனித அச்சுறுத்தல்கள்:
இந்த 14 வகையான தவளைகளும் அழகானவை மற்றும் வண்ணமயமானவை. அதே நேரம் இவை அனைத்தும் விளிம்பின் உச்சகட்டத்தில் இருக்கின்றன.மனித ஆக்கிரமிப்புகள் மற்றும் தொழில் வளர்ச்சிகளிலும் இருந்து இத்தகைய இனங்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்று கூறியுள்ளார் தாஸ்.
தவளை இனங்கள்:
நெல்லியம்பதி தவளை, குகை நடனத் தவளை, கொட்டிகெஹரென்ஸிஸ் - (வாய்க்கு அடியில் வெள்ளைப் பை), குறிச்சியர் நடனத் தவளை, சைரந்திரி, உத்தரகாட்டி , நிலுவேசி , மல்லன் நடனத் தவளை, பொட்டு நடனத் தவளை
ஆகியவை அவற்றுள் சில வகையான தவளை இனங்கள் ஆகும்.
பொண்டாட்டியே சரணம்:
மொத்ததில் கடவுளாய் இருந்தாலும், மனிதனாய் இருந்தாலும், தவளையாய் இருந்தாலும் மனைவியைச் சமாதானப் படுத்த ஒற்றைக் காலில் நின்றாக வேண்டியது முக்கியமானதாகத்தான் இருக்கின்றது.