சென்னை: சிறார் சிறையில் இருந்து 14 பேர் மீண்டும் தப்பி ஓட்டம் – 2 பேர் பிடிபட்டனர்
சென்னை: சென்னை சிறுவர் சிறுமியர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 14 சிறுவர்கள் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் பிடிபட்ட இருவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை கெல்லீஸ் பகுதியில் சிறுவர் சிறுமியர் கூர்நோக்கு இல்லம் உள்ளது. அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த சிறார்களில் 14 பேர், காப்பாளர் விஜயகுமாரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
இது தொடர்பாக தலைமை செயலக காலனி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்து தப்பியோடியவர்களை போலீசார் தேடி வந்தனர். இதில் இருவர் கொடுங்கையூர் குப்பை கிடங்கு அருகே மீட்கப்பட்டனர். அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் 12 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்த கூர்நோக்கு இல்லத்தில், இந்த வருடத்தில் மட்டும் 3வது முறையாக சிறார்கள் தப்பியோடி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகம் முழுவதும் குற்றவழக்குகளில் கைது செய்யப்படும் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் இங்கு அடைக்கப்படுகின்றனர். போதிய காவலர்கள் பணியில் இல்லாததன் காரணமாக, சிறுவர்கள் தப்பி ஒடியதாக கூறப்படுகிறது. சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு உரிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தி, அதிகளவு காவலர்களை நியமிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த பத்து தினங்களுக்கு முன்னர் செங்கல்பட்டு அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 17 சிறுவர்கள் தப்பி ஓடினர். இதில் இருவர் மட்டுமே பிடிப்பட்டனர். மாயமான 15 பேரை பற்றி எந்த தகவலும் இல்லை. இந்த நிலையில் சென்னையில் 15 சிறார் குற்றவாளிகள் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.