புழல் சிறையில் இருந்து மேலும் 14 ஆயுள் கைதிகள் விடுதலை.. 5-ம் கட்டமாக நடவடிக்கை
சென்னை: எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புழல் சிறையில் இருந்து மேலும் 14 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 1700-க்கும் மேற்பட்ட கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டது
அதன்படி உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் மற்றும் விதிகளின்படி மாநிலம் முழுவதிலும் உள்ள ஆயுள் தண்டனை கைதிகள் கணக்கெடுக்கப்பட்டு, பின்னர் அவர்களை படிப்படியாக விடுதலை செய்ய, தகுதியான நபர்களை அதிகாரிகள் தேர்வு செய்து வருகின்றனர்.
முதல்கட்டமாக புழல் ஜெயிலில் இருந்து கடந்த 6-ந் தேதி 67 ஆயுள்கைதிகளும், கடந்த 12-ந் தேதி 52 கைதிகளும், 20-ம் தேதி 47 கைதிகளும் விடுதலை செய்யப்பட்டனர். 4-ம் கட்டமாக ஜுன் 26-ம் தேதி, 11 ஆயுள் தண்டனை கைதிகளும் விடுதலை செய்யப்பட்டனர். இதுவரை 12பெண்கள் உள்பட ஆயுள் தண்டனை கைதிகள் 177 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், 5-ம் கட்டமாக புழல் சிறையில் இருந்து மேலும் 14 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். சிறையில் இருந்து 14 பேரும் வெளியே வந்ததும், அவர்களை உறவினர்கள் கட்டித்தழுவி வரவேற்றனர்.