திரிபாதி உட்பட சிறப்பாக பணியாற்றிய 14 போலீஸ் அதிகாரிகளுக்கு பதக்கம்: ஜெ. உத்தரவு
சென்னை: சுதந்திர தினத்தையொட்டி புலன் விசாரணைப் பணியில் மிகச்சிறப்பாகப் பணியாற்றிய 14 போலீஸ் அதிகாரிகளுக்கு பதக்கங்களை அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.
நாளை நாட்டின் 70வது சுதந்திர தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இதனை கோலாகலமாகக் கொண்டாட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், 14 தமிழக போலீஸ் அதிகாரிகளுக்கு பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் அபூர்வவர்மா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சுதந்திர தினத்தையொட்டி 14 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள் வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
புலன் விசாரணைப் பணியில் மிகச்சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும் மற்றும் பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணி புரிந்ததை பாராட்டும் வகையிலும் கீழ்கண்டகாவல் அதிகாரிகளுக்குச் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப் பணிப்பதக்கங்களை வழங்கிட, முதல்வர் ஆணையிட்டுள்ளார்:-
1. எஸ்.அரவிந்த், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு, அயல்பணி, குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, சென்னை.
2. என்.சிலம்பரசன், காவல்துணைக் கண்காணிப்பாளர், திண்டிவனம் உட்கோட்டம்.
3. மா.விவேகானந்தன், காவல்துணைக் கண்காணிப்பாளர், உடுமலைப்பேட்டை உட்கோட்டம்.
4. மு.சோமசுந்தரம், காவல்துணைக் கண்காணிப்பாளர், வாழப்பாடி உட்கோட்டம்.
5. எஸ்.ஸ்ரீமதி, காவல் ஆய்வாளர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, திருப்பூர்.
6. டி.சரவணக்குமார், காவல் ஆய்வாளர், குற்றப் பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, இராமநாதபுரம் மாவட்டம்.
7. அ.தர்மலிங்கம், காவல் ஆய்வாளர், தனிபிரிவு, விருதுநகர் மாவட்டம்.
8. த.ஜோதி, காவல் ஆய்வாளர், தொடர் குற்ற குழு, கோயம்புத்தூர் மாநகர்.
9. ரே.ஹேமலதா, காவல் ஆய்வாளர், ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையம், திருச்சி மாவட்டம்.
இதே போன்று, பொது மக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய கீழ்க்கண்ட காவல்துறை அதிகாரிகளுக்கு அவர்களது பணியைப் பாராட்டி, சிறந்த பொதுச் சேவைக்கான முதல்வரின் காவல் பதக்கம் வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார்:-
1. ஜே.கே.திரிபாதி, காவல் துறை கூடுதல் இயக்குநர், சட்டம் மற்றும் ஒழுங்கு.
2. என்.கே.செந்தாமரை கண்ணன், காவல் துறை தலைவர், வடக்கு மண்டலம்.
3. செந்தில்குமார், காவல் துறைதுணைத் தலைவர், தஞ்சாவூர்சரகம்.
4. மயில்வாகனன், காவல் கண்காணிப்பாளர், திருவாரூர் மாவட்டம்.
5. சி.பாஸ்கர், காவல் துணைக் கண்காணிப்பாளர், கும்பகோணம் உட்கோட்டம்.
விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவரும் தலா 8 கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கமும், 5 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் பெறுவார்கள்.
மேற்கண்ட விருதுகள், முதல்வர் பங்கேற்கும் சிறப்பு விழாவில் மேற்சொன்ன காவல்துறை அதிகாரிகளுக்கு அளிக்கப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.