கன்னியாகுமரி அருகே கைதான இலங்கை மீனவர்களுக்கு நீதிமன்ற காவல்
ராமநாதபுரம்: அனுமதியை மீறி மீன்பிடித்ததாக கன்னியாகுமரி கடல் பகுதியில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 14 பேருக்கு ஜூன் 4ம்தேதிவரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
மீன்களின் இனப்பெருக்கத்துக்காக தமிழகத்தின் கிழக்கு கடலோர பகுதிகளில் மீன்பிடிக்க 45 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கை நாட்டு மீனவர்கள் சிலர் இரு படகுகளில் கன்னியாகுமரி அருகேயுள்ள கடல் பகுதியில் நேற்று மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படை வீரர்கள், அந்த படகுகளை சுற்றி வளைத்து மீனவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது இரு படகுகளிலும் தலா 400 கிலோ அளவுக்கு மீன்கள் இருப்பது தெரியவந்தது. விதிமுறைகளை மீறியதற்காக இரு படகுகளிலுமிருந்த 14 இலங்கை மீனவர்களை கைது செய்த கடற்படையினர், அடுத்த கட்ட விசாரணைக்காக, அவர்களை தூத்துக்குடியிலுள்ள தமிழக கடலோர காவல்படையிடம் ஒப்படைத்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் இன்று பரமகுடியில் உள்ள ஜுடிசியல் மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை ஜூன் 4ம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இவர்கள் அனைவரும் இலங்கையின் நீரோழும்பு பகுதியை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
இந்திய கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடித்ததாக, இந்தாண்டில் இதுவரை 64 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.