கட்டிட விதிமீறல்: சென்னையில் 14 மாடி 'ஐடி பார்க்' கிற்கு சீல்
சென்னை: சென்னையில் விதிகளை மீறி கட்டப்பட்ட 14 அடுக்குமாடி ஐடி பார்க் கட்டிடம் ஒன்றுக்கு சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சென்னை எம்.ஆர்.சி. நகரில் 14 அடுக்குமாடி ஐடி பார்க் ஒன்று உள்ளது. லீலா குருப்பால் ப்ரொமோட் செய்யப்பட்டு ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு இந்த கட்டிடம் விற்கப்பட்டது. ப்ரொமோட்டர்கள் 13 மாடிகளுக்கு அனுமதி வாங்கிவிட்டு 14 மாடிகள் கட்டினார்கள். இது தவிர கட்டிடத்தின் நான்கு பக்கங்களிலும் போதிய இடம் விடாமல் அதிலும் ஆக்கிரமித்து கட்டியுள்ளனர்.
இந்த விதிமீறல்களை திருத்திக் கொள்ள போதிய அவகாசம் அளித்தும் உரிமையாளர்கள் எந்தவித திருத்தங்களையும் செய்யாததால் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும அதிகாரிகள் கட்டிடத்திற்கு நேற்று முன்தினம் சீல் வைத்தனர்.
சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலை அடுத்து 2.2 லட்சம் சதுர அடியில் இந்த ஐடி பார்க் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் தற்போதைய மதிப்பு ரூ.220 கோடியாகும். இக்கட்டிடத்தை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் ரூ.172 கோடிக்கு வாங்கியது.
இது குறித்து ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும நடவடிக்கை பற்றி எங்கள் நிறுவனத்திற்கு தெரியாது. கட்டிடத்தை வாங்கிய பிறகு நாங்கள் எந்த கட்டுமானப் பணியும் செய்யவில்லை என்றார்.