ஆந்திர எல்லையில் தமிழக மீனவர்கள் 140 பேர் சிறைபிடிப்பு !
சென்னை: சென்னை, காசிமேடு பகுதியிலிருந்து ஆந்திர எல்லைக்கு மீன்பிடிக்கச் சென்ற 140 தமிழக மீனவர்களை அம்மாநில மீனவர்கள் சிறைபிடித்துள்ளனர்.
சென்னை காசிமேடு பகுதிகளிலிருந்து ஆழ் கடலில் மீன் பிடிக்க தமிழக மீனவர்கள் ஆந்திர எல்லை வரை போய் வருவது வழக்கம். அதேபோல் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த செவ்வாய்கிழமையன்று 200க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
ஆந்திரா கடற்பகுதி கொல்லமேடு பகுதியில் மீன்பிடிப்பதாக கூறி 13 விசை படகுகளில் சென்ற 140 மீனவர்களை அம்மாநில மீனவர்கள் சிறைபிடித்துச் சென்றனர். சிறைபிடிப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த காசிமேடு விசைபடகு உரிமையாளர்கள் இன்று ஆந்திரா செல்ல உள்ளனர்.
சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்கள் 140 பேர் மற்றும் அவர்களின் விசைப்படகுகளை விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக மீனவர்கள் 300 பேரை ஆந்திர மீனவர்கள் சிறைபிடித்துச் சென்றது. குறிப்பிடத்தக்கது. பக்கத்து மாநில மீனவர்களே அடிக்கடி சிறைபிடிப்பு வேலையைச் செய்தது காசிமேடு பகுதி மீனவர்களைப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கின்றது.