பசுபதி பாண்டியன் 3ம் ஆண்டு நினைவு தினம்: தூத்துக்குடியில் 4 நாட்களுக்கு 144 தடை உத்தரவு
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன் நினைவு தினத்தை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன், திண்டுக்கல் நத்தவனத்துப்பட்டி பகுதியில் கொலை செய்யப்பட்டார். அவரது மூன்றாம் ஆண்டு நினைவு தினம் வரும் 10ம் தேதி அவரது சொந்த கிராமமான அலங்காரதட்டு பகுதியில் அனுசரிக்கப் பட உள்ளது.
இதில் கலந்து கொள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அவரது ஆதரவாளர்கள் தூத்துக்குடிக்கு வருகை தர உள்ளனர். எனவே, அப்போது அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படாவண்ணம் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு நான்கு தினங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
இந்த தடை உத்தரவு இன்று காலை 6 மணிமுதல் 11 ம் தேதி காலை 6 மணி வரை நீடிக்கும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.துரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு நிறுவனர் பசுபதிபாண்டியனின் நினைவு நிகழ்ச்சி அமைதியான முறையில் நடப்பதற்காக 7ந் தேதி (நேற்று) காலை 6 மணி முதல் வருகிற 11ந் தேதி காலை 6 மணி வரை தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி விழாவில் கலந்து கொள்ளும் அனைவரும் ஊர்வலமாக வருவதற்கும், 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் அனைத்து வகை வாடகை வாகனங்கள் நுழைவதற்கும் குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144ன் கீழ் மாவட்ட கலெக்டரால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
விழாவை அமைதியான முறையில் நடத்திட எனது தலைமையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. விழாவில் கலந்து கொள்ள வருபவர்கள் தூத்துக்குடி நகர பகுதிக்குள் செல்லாமல் போலீசாரால் அனுமதிக்கப்பட்ட வழிதடத்தில் செல்ல அறிவுறுத்தப்படுகிறது. இந்த தடை உத்தரவு திருமணம் மற்றும் இறுதி சடங்கு ஊர்வலங்களுக்கு பொருந்தாது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.