ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று முதல் அக்.31 வரை 144 தடை உத்தரவு!
இமானுவேல் சேகரன் நினைவு நாள் மற்றும் தேவர் குருபூஜை விழா ஆகியவற்றை முன்னிட்டு ராமநாதபுரத்தில் இன்று முதல் அக்டோபர் 31 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் : இமானுவேல் சேகரன் நினைவு நாள் மற்றும் தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு ராமநாதபுரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதோடு பிற மாவட்ட வாகனங்கள் வரவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செப்டம்பர் 11ம் தேதி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதே போன்று அக்டோபர் 30ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவும் நடைபெற உள்ளது. இதனால் பல மாவட்ட மக்கள் இங்கு வந்து அஞ்சலி செலுத்துவதற்காக கூடுவார்கள் என்பதால் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க செப்டம்பர் 9 முதல் அக்டோபர் 31 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது, இது குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் லதா கூறியுள்ளதாவது : இமானுவேல் சேகரன் நினைவுதினத்திற்கு அஞ்சலி செலுத்த சிவகங்கை மாவட்டம் வழியாக செல்லும் வாகனங்களுக்கும், பரமக்குடி, ராமநாதபுரம், ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் செல்லும் வழித்தடங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
வழித்தடம் மாற்றம்
மதுரையிலிருந்து ராமநாதபுரம், ராமேஸ்வரம் வரை செல்லும் பேருந்துகள் பூவந்தி, சிவகங்கை, இளையான்குடி, நயினார்கோவில் வழியாகச் செல்ல வேண்டும். பரமக்குடி செல்லும் வாகனங்கள் மட்டும் மானாமதுரை வழியாகச் செல்ல வேண்டும்.
இளையான்குடி வழியாக செல்ல கூடாது
சிவகங்கை மற்றும் காளையார்கோவிலில் இருந்து செல்லும் வாகனங்கள் சிவகங்கை, மானாமதுரை, பார்த்திபனூர் வழியாகச் செல்லவேண்டும். இளையான்குடி வழியாகச் செல்லக் கூடாது. இளையான்குடியில் இருந்து செல்லும் வாகனங்கள் அதிகரை, முள்ளியரேந்தல், மஞ்சள்பட்டினம் வழியாகச் செல்ல வேண்டும். குமாரக்குறிச்சி வழியாகச் செல்லக்கூடாது.
மானாமதுரை வாகன வழியும் மாற்றம்
மானாமதுரையில் இருந்து பார்த்திபனூர் வழியாகச் செல்ல வேண்டும். அண்ணா சிலை, பழைய பேருந்து நிலையம், வழியாகச் செல்லக் கூடாது. கொந்தகை, முனியாண்டிபுரம், பசியாபுரம், கீழடி ஆகிய ஊர்பளில் இருந்து சிலைமான், திருப்புவனம் வழியகச் செல்ல வேண்டும். பாட்டம், பொட்டபாளையம் வழியாகச் செல்லக் கூடாழ.
ஆட்சியர் உத்தரவு
பாட்டத்தில் இருந்து செல்பவர்கள் பொட்டபாளையம், சிந்தாமணி விலக்கு, ரிங்ரோடு, சிலைமான், திருப்புவனம் வழியாகச் செல்ல வேண்டும். கொந்தகை, பசியாபுரம் வழியாகச் செல்லக் கூடாது. சிவகங்கை மாவட்டத்தில் இருந்து பரமக்குடிக்கு மேற்பட்ட பகுதி வழியாகச் செல்லும் வாகனங்கள் அனைத்தும் அதே வழியில் தான் திரும்ப வேண்டும் என்றும் ஆட்சியர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியுள்ளார்.