பசுபதிபாண்டியன் நினைவு தினம்... தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு!
மறைந்த பசுபதி பாண்டியன் நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி : பசுபதி பாண்டியன் நினைவு தினத்தை ஓட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் 144 தடை உத்தரவு அமுலில் இருக்கும் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் அலங்காரதட்டு பகுதியில் நாளை 10ம் தேதி தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு நிறுவனர் பசுபதி பாண்டியன் நினைவு தினம் வருகிறது. இதையொட்டி அசம்பாவிதம் இல்லாமல் தடுக்கவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் இன்று மாலை முதல் 11ம் தேதி மாலை 6 மணி வரை குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 144 கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த தடையின் போது தூத்துக்குடி மாவட்டத்திலும் பிற பகுதிகளிலிருந்து விழாவில் கலந்து கொள்ளும் பொது மக்கள் 5 பேருக்கு மேல் கூடுவதற்கும், ஜோதி எடுத்து வருவதற்கும், ஊர்வலம் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயுதங்கள், கட்சி, சமுதாய கொடிகள் கொண்டு வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வாகனங்களில் ஆட்களை ஏற்றி வருவதற்கும், அன்னதானம் வழங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு பள்ளி வாகனங்கள், தினசரி வாகனங்கள், அத்திவாசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள், சுற்றுலாவுக்காக வரும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள், ஆம்னி பஸ் ஆகியவற்றுக்கு பொருத்தாது. இந்த நாட்களில் வேறு ஏதேனும் கூட்டங்கள் நடத்த வேண்டி இருந்தால் தூத்துக்குடி மாவட்ட எஸ்பியை அணுகி அனுமதி பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.