144 தடை உத்தரவு ரத யாத்திரைக்கு ஏன் பொருந்தாது - விளக்கம் சொல்லும் அமைச்சர் ஜெயக்குமார்
144 தடை உத்தரவு வி.எச்.பி ரத யாத்திரைக்குப் பொருந்தாது என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை : வி.எச்.பி.,யின் ரத யாத்திரை பிரச்னை இல்லாமல் பயணிக்கவே நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
விஷ்வ ஹிந்து பரிஷித்தின் ராமராஜ்ய ரத யாத்திரை இன்று கேரளா வழியாக தமிழக எல்லைக்குள் வந்தது. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி நடத்தப்படும் இந்த யாத்திரை தமிழகத்திற்குள் வரக்கூடாது என்று வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனை மீறியும் பல்வேறு இடங்களில் போராடியவர்களை போலீஸார் கைது செய்து வருகின்றனர். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
144 தடை உத்தரவு அமலில் இருக்கும் போது, ரத யாத்திரைக்கும் மட்டும் எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்று பல அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதுகுறித்து தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, 144 தடை உத்தரவு ரத யாத்திரைக்கு பொருந்தாது என்றும், அந்த யாத்திரை எந்த வித பிரச்னையும் இல்லாமல் பயணிக்கவே தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்கவே தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், மதச்சார்பற்ற நாடு என்கிற அடிப்படையிலேயே ரத யாத்திரைக்கு தமிழகத்தில் அனுமதி வழங்கியதாவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக நெல்லை மாவட்டத்தில் ரத யாத்திரைக்கு அனுமதி வழங்கும் முன்பே, பல்வேறு பாதுகாப்பு அம்சங்களையும் அலசி ஆராய்ந்து ஆலோசனை செய்தே அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது என்றும், இதில் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வேண்டுமென்றே குழப்பம் விளைவிக்கப்பார்ப்பதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.